பொன்னேரி, மே 6: மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட புங்கம்பேடு பகுதியில் கடந்த 2 நாட்களாக 10க்கும் மேற்பட்டோரை தெரு நாய் ஒன்று கடித்து குதறி வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். சாலையில் செல்வோரை விடாமல் விரட்டிவிரட்டி கடிக்கும் தெரு நாய், நேற்று காலையிலும் தொடர்ந்து பொதுமக்களை கடித்து குதறியுள்ளது. நாய்க்கடிக்கு உள்ளானோர் மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்றனர். இதில், பலத்த காயமடைந்த சிறுவன் பரத் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இதேபோல், மீஞ்சூர் பேரூராட்சியில் சுற்றி திரியும் தெரு நாய்கள் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சாலையில் விளையாடும் குழந்தைகள், கடைக்குச் செல்லும் பெண்கள், வேலைக்கு செல்வோர் என ஒருவரையும் விட்டு வைக்காமல் நாய்கள் அச்சுறுத்தி வருகின்றன. அண்மைக் காலமாக மீஞ்சூர் பேரூராட்சியில் தினந்தோறும் நாய் கடித்து பொதுமக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தெரு நாய்கள் மீது பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் புகார் தெரிவிக்கின்றனர். பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக சாலைகளில் சுற்றி திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்திட மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post மீஞ்சூர் பகுதியில் கடந்த 2 நாளில் தெருநாய் கடியால் சிறுவன் உள்பட 10க்கும் மேற்பட்டோர் காயம்: பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.