
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே மேலையூர் வடக்கு தெருவை சேர்ந்த தங்கதுரை மகன் தமிழ்துரை (வயது 15). 10-ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தார். இந்த நிலையில் மேற்கண்ட பகுதியில் கடந்த மாதம் 25-ம் தேதி உத்திராபதியார் கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவிற்காக கட்டப்பட்டிருந்த லைட் போஸ்ட் அருகில் தமிழ்துரை விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரது கை லைட் போஸ்டில் பட்டதில் தமிழ்துரை மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டு மயக்க நிலையில் கிடந்துள்ளார். பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த தமிழ்துரையை அருகில் இருந்தவர்கள் மீட்டு மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் தமிழ்துரை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், 10-ம் வகுப்பு பொத்தேர்வு முடிவு இன்று வெளியான நிலையில், மாணவன் தமிழ்துரை, 313 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார். மகனின் தேர்வு முடிவை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். மேலும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவன் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள சம்பவம் குடும்பத்தினர் மத்தியிலும் அக்கம் பக்கத்திலும் பெரும் சோகத்தை எற்படுத்தி உள்ளது.