மிட்டாரெட்டிஅள்ளி வழியாக பொம்மிடிக்கு வனப்பாதையில் தார்சாலை அமைக்க அனுமதி

1 week ago 3

*40 ஆண்டு கால போராட்டத்திற்கு விடிவு

தர்மபுரி : கடந்த 40 ஆண்டு காலமாக மிட்டாரெட்டிஅள்ளி வழியாக பொம்மிடிக்கு தார்சாலை அமைக்க கோரி, பொதுமக்கள் கோரிக்கை விடுத்த வந்த நிலையில், முதற்கட்ட அனுமதி கிடைத்துள்ளது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளிக்கும், பொம்மிடிக்கும் நடுவேயுள்ள நூலஅள்ளி காப்புகாடு மலை அடர்ந்த மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும்.

பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த மக்கள் தர்மபுரிக்கு வருவதற்கு கடத்தூர், ஒடசல்பட்டி வழியாக தர்மபுரிக்கு சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து வரவேண்டும். அல்லது பொம்மிடியில் இருந்து வே.முத்தம்பட்டி, பாகல்பட்டி வழியாக நல்லம்பள்ளியை, அதே 50 கிலோ மீட்டர் தூரம் கடந்து செல்ல வேண்டும்.

பொம்மிடியில் வாரந்தோறும் வியாழன், நல்லம்பள்ளியில் செவ்வாய் தோறும் வாரச்சந்தை கூடுவது வழக்கம். பொம்மிடி சந்தையில் ஆடு, மாடுகள், மளிகை பொருட்கள் வாங்க நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்த முன்னோர்கள், கால்நடையாக மிட்டாரெட்டிஅள்ளி வழியாக நூலஅள்ளி காப்பு காடு மலை வழியாக செல்ல ஒரு பாதை அமைத்து சென்று வந்துள்ளனர்.

இதேபோல், நல்லம்பள்ளியில் நடக்கும் செவ்வாய் சந்தைக்கு, பொம்மிடி பகுதி மக்கள், இதே வழியாக நடந்தே வந்துள்ளனர். இந்த பாதை இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 40 ஆண்டு காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் மண் சாலையை தார்சாலையாக மாற்ற வேண்டும். வனத்துறை தார்சாலை அமைக்க உரிய அனுமதியை பெற்றுதர வேண்டும் என நல்லம்பள்ளி மற்றும் பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து மிட்டாரெட்டிஅள்ளி ஊராட்சி பகுதி மக்கள் கூறியதாவது: மிட்டாரெட்டிஅள்ளியில் இருந்து கோம்பேரி ஏரி வரை தார்சாலை உள்ளது. அதன் பின்னர் மலைப்பாதையில் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு காளிகரம்பு வரை மண்பாதை உள்ளது.

காளிகரம்பில் இருந்து பொம்மிடி ரயில்நிலையம் வரை தார்சாலை உள்ளது. பல ஆண்டுகளாக இந்த பாதையில் தார்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம். வனத்துறை அனுமதி கிடைக்காததால், கனவாகவே உள்ளது. வெறும் 4 கிலோ மீட்டர் தூரம் மட்டும் தார்சாலை அமைத்தால், 40 கிலோ மீட்டர் தூரம் பயணம் மிச்சப்படும்.

நல்லம்பள்ளி, மாதேமங்கலம், மிட்டரெட்டிஅள்ளி, மிட்டாதின்னஅள்ளி, நார்த்தம்பட்டி, இலளிகம், பூதனஅள்ளி உள்ளிட்ட 15 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு ரயில் நிலையமான மொரப்பூர் ரயில் நிலையத்திற்கு செல்ல, சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும்.

தர்மபுரி நகரில் இருந்து சென்னைக்கு செல்ல ரயில் மார்க்கம் கிடையாது. எனவே, இந்த மலைப்பாதையில் தார்சாலை அமைத்தால், தலைநகருக்கு செல்ல பொம்மிடி ரயில் நிலையத்திற்கு விரைவில் அடைய முடியும்.

அங்கிருந்து சென்னை உள்ளிட்ட வடமாநிலங்களுக்கும், சேலம் வழியாக தென்மாவட்டங்களுக்கும் அனைத்து ரயில்களிலும் செல்ல வசதி ஏற்படும். ஒன்றிய அரசு அனுமதி வழங்கினால் தர்மபுரி, நல்லம்பள்ளி, பொம்மிடி பகுதியை சேர்ந்த 2 லட்சம் மக்கள் பயன் அடைவர். இவ்வாறு அவர்கள் கூறினர். தர்மபுரி மாவட்ட வனத்துறை மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் கூறியதாவது:

மிட்டாரெட்டிஅள்ளியில் இருந்து காளிகரம்பு வரை உள்ள 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு, நூலஅள்ளி காப்பு காடு பகுதியில் தார்சாலை அமைக்க, வனப்பாதுகாப்பு சட்டத்தின்படி, இணைய தளம் மூலம் பிடிஓ சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. கடந்த 3 மாதத்திற்கு முன்பு, வனத்துறை துணை ஆய்வாளர் உள்ளிட்ட குழுவினர், மிட்டாரெட்டிஅள்ளிக்கு சென்று நேரில் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் சாலை அமைக்கப்படும் போது வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கை, மரங்களை அகற்றுவதற்கான செலவினம், மரங்களுக்கு இணையாக புதிய மரக்கன்றுகள் நடவு செய்வதற்கான இடம் மற்றும் அதற்கான செலவினம் குறித்து ஆய்வு செய்தனர்.

இதை தொடர்ந்து, ஒன்றிய வனத்துறை மூலம் முதற்கட்ட அனுமதி பெறப்பட்டுள்ளது. வனப்பகுதியில் சாலை அமைப்பதற்காக, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் வனத்துறைக்கு 5.4 ஹெக்டர் நிலத்தை பரிகம் பி.காப்புக்காடு ஒட்டியபடி கம்மம்பட்டி பகுதியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வனப்பாதுகாப்பு சட்டத்தின்படி, நிபந்தனைகளுக்கு உட்பட்டு, நல்லம்பள்ளி ஒன்றியத்தில் இருந்து உடன்பாட்டு அறிக்கை மற்றும் செலவினத் தொகையும் தர வேண்டும். இந்த நடைமுறைகள் முடிந்ததும், சாலை அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post மிட்டாரெட்டிஅள்ளி வழியாக பொம்மிடிக்கு வனப்பாதையில் தார்சாலை அமைக்க அனுமதி appeared first on Dinakaran.

Read Entire Article