
சென்னை,
நடிகர் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். தற்போது கட்சி தொடங்கப்பட்டு இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதற்கிடையே 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மையமாக கொண்டு தேர்தல் பணிகளை விஜய் மேற்கொண்டு வருகிறார்.
தேர்தலை முன்னிட்டு பல்வேறு பொது இடங்களுக்கு அவர் பயணம் செய்விருக்கிறார். இதனிடையே, விஜய்க்கு சமூக ஊடகங்களில் அச்சுறுத்தல் எழுந்த நிலையில், அவரின் பாதுகாப்பு கருதி ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது. அச்சுறுத்தல் தொடர்பான உளவுத் துறையின் அறிக்கையின் அடிப்படையில், நாட்டியுள்ள அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள் உள்ளிட்டோருக்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்கி வருகின்றது.
இந்தநிலையில், உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்த நிலையில் ஒய் பிரிவு பாதுகாப்பை விஜய் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தவெக தலைவர் விஜய்க்கு மார்ச் 14 முதல் ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இனி துணை ராணுவத்தினர் விஜய்யின் பாதுகாப்புக்காக உடன் இருப்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய 8 முதல் 11 மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் தமிழகத்தில் மட்டும் விஜய்க்கு பாதுகாப்பு அளிக்க உள்ளனர். தற்போது வெளிநாட்டு பவுன்சர்கள் விஜய்யின் பொது நிகழ்ச்சிகளில் அவருக்கான பாதுகாப்பை உறுதி செய்து வரும் நிலையில், இனி மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை கமாண்டோக்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் விஜய் இருப்பார் என்று தெரிகிறது. விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக பல்வேறு கருத்துகள் நிலவி வந்தன. விஜய்யை ரகசியமாக கண்காணிப்பதற்கான ஏற்பாடுகளே ஒய் பிரிவு பாதுகாப்பு என விமர்சிக்கப்பட்டது.