
ஜெய்ப்பூர்,
ஐ.பி.எல். தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்று வரும் 2-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன மிட்செல் மார்ஷ் 4 ரன்களிலும், நிக்கோலஸ் பூரன் 11 ரன்களிலும், ரிஷப் பண்ட் 3 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
இதனையடுத்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன மார்க்ரமுடன் ஆயுஷ் பதோனி கை கோர்த்தார். இருவரும் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இவர்களில் மார்க்ரம் 66 ரன்களிலும், பதோனி 50 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதி கட்டத்தில் அப்துல் சமத் (10 பந்துகளில் 30ரன்கள்) அதிரடியாக விளையாடி லக்னோ அணி வலுவான நிலையை எட்ட உதவினார். குறிப்பாக சந்திப் சர்மா வீசிய கடைசி ஓவரில் 4 சிக்சர்கள் விளாசி அசத்தினார்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் அடித்துள்ளது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஹசரங்கா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற வலுவான இலக்கை நோக்கி ராஜஸ்தான் களமிறங்க உள்ளது.