மார்க்கெட்டுகளில் மாம்பழம் விலை வீழ்ச்சி: உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றம்

2 days ago 6

ஈரோடு, ஜூன் 6: ஈரோடு மார்க்கெட்டுகளில் விற்பனைக்குக் கொண்டு செல்லப்படும் மாம்பழங்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், நாமக்கல், திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக அதிக அளவில் மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை, சத்தியமங்கலம், தாளவாடி, கோபி, அந்தியூர், அம்மாபேட்டை, குருவரெட்டியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கணிசமான அளவில் மாம்பழம் நடப்பாண்டில் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது, மாம்பழம் சீசன் துவங்கி இருக்கும் நிலையில், மாம்பழங்களுக்கு உரிய விலை கிடைக்காமல், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கடந்தாண்டு ஒரு டன் மாம்பழம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை எடுக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு டன் மாம்பழம் ரூ.4,500க்கு மட்டுமே எடுக்கப்படுவதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர். இதனால் கடந்த ஒரு வாரமாக மாம்பழங்கள் விற்பனையாகாமல், தோட்டத்தில் உள்ள குடோன்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலான மாம்பழங்கள் அழுகி குப்பையில் கொட்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். மேலும், தற்போது மாம்பழங்களுக்குக் கிடைக்கும் விலை, பறிக்கும் கூலிக்குக் கூட கட்டுபடி ஆகாது என்பதால், தோப்புகளில் மாம்பழங்களைப் பறிக்காமல் விட்டுவிட்டதாகவும், மரங்களிலேயே மாம்பழங்கள் பழுத்து தானாக கீழே விழுந்து தோப்பு முழுதும் சிதறி காணப்படுவதாகவும் விவசாயிகள் வேதனையுடன் கூறினர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கடந்தாண்டு ஒரு டன் மாம்பழம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை எடுக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு டன் மாம்பழம் ரூ. 4,500க்கு மட்டுமே எடுக்கப்படுகிறது. இந்த விலைக்கு கூட கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகளும், மாம்பழக்கூழ் ஆலைகளும் முன்வரவில்லை. ஒரு டன் மாம்பழத்தை ரூ. 4,500க்கு விற்பனை செய்தால் விவசாயிகளுக்கு எந்த லாபமும் இல்லை. மாறாக, ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்படும். விவசாயிகளுக்கே இந்த நிலை இருந்தால், மாமரங்களை குத்தகைக்கு எடுத்து மாம்பழங்களை அறுவடை செய்து சந்தையில் விற்பனை செய்யும் குத்தகைதாரர்கள், சிறு வியாபாரிகளின் நிலையை எண்ணி பார்க்க வேண்டும். எனவே, நெல், கரும்புகளுக்குக் கிடைக்கும் ஆதார விலை போன்று, மாம்பழங்களுக்கும் ஆதர விலையாக ஒரு டன்னுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை நிர்ணயம் செய்ய, தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

The post மார்க்கெட்டுகளில் மாம்பழம் விலை வீழ்ச்சி: உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article