தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரத்தை நீட்டிக்க திட்டம்

1 hour ago 3

ஊட்டி: சுற்றுலா பயணிகள் பார்வைக்காக தாவரவியல் பூங்கா மாடங்களில் வைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரம் மேலும், சில நாட்களுக்கு வைக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆண்டு தோறும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதனை காண லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இம்முறை கடந்த மாதம் 15ம் தேதி துவங்கி 25ம் தேதி வரை 11 நாட்கள் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடந்தது.

மலர் கண்காட்சியை முன்னிட்டு தோட்டக்கலைத்துறை சார்பில் பண்டைய தமிழ் அரசர்களின் வாழ்வியல் முறைகளை வெளிக்காட்டும் வகையில் பிரம்மாண்டமான அரண்மனை நுழைவு வாயில் வடிவமைப்பு 1 லட்சத்து 30 ஆயிரம் மலர்களால் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், கார்னேசன்,ரோஜா, சாமந்தி போன்ற 2 லட்சம் மலர்களால் சங்க கால அரண்மனை ஒன்று பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அத்துடன், 50 ஆயிரம் மலர்களை கொண்டு அன்னப்பறவை அமைக்கப்பட்டிருந்தது. 4 ஆயிரம் மலர்த் தொட்டிகள் மற்றும் 35 ஆயிரம் சாமந்தி,ரோஜா மலர்களால் கல்லணை மாதிரி அமைக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, பூங்காவின் பல்வேறு பகுதிகளில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பழங்கால சிம்மாசனம், ஊஞ்சல், கண்ணாடி, இசைக் கருவிகள், பீரங்கி, யானை,புலி, சதுரங்க அமைப்பு போன்ற பல்வேறு மலர் அலங்கார வடிவமைப்புகளும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த அலங்காரங்கள் அனைத்தும் வாடிவிட்டன.இதனால், அவைகள் அகற்றப்பட்டது. அதேசமயம் மாடங்களில் 35 ஆயிரம் தொட்டிகளை கொண்டு லில்லியம்,மேரிகோல்டு உட்பட பல்வேறு மலர் தொட்டிகளை கொண்ட மலர் அலங்காரங்கள் வைக்கப்பட்டுள்ளன.ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறையாமல் உள்ளதால், சுற்றுலா பயணிகள் வசதிக்காக மேலும் சில நாட்களுக்கு மாடங்களில் மலர் அலங்காரங்களை வைக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மேலும், மாடங்களில் வைக்கப்பட்டுள்ள மலர் தொட்டிகளில் உள்ள மலர்கள் வாடினால், உடனுக்குடன் அகற்றப்பட்டு, அந்த இடத்தில் புதிய மலர் தொட்டிகள் கொண்ட அலங்கரித்து வைக்கப்படுகிறது. இதனால், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் இதனை கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும், இந்த மலர் அலங்காரங்களை மேலும், சில நாட்களுக்கு நீட்டிக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. எனவே, ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் இந்த மலர் அலங்காரங்களை கண்டு ரசித்து செல்லலாம்.

The post தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரத்தை நீட்டிக்க திட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article