சென்னை: மாம்பழம் விற்பனை குறைவால் பாதித்த விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார். பூந்தமல்லியில் வணிகர் நல வாரியத்தில் கட்டணம் இல்லா புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில பொருளாளர் சதக்கத்துல்லா தலைமையில் பூந்தமல்லி வியாபாரிகள் சங்க மண்டபத்தில் நேற்று நடந்தது. சங்க செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் தரன், துணைத் தலைவர் சார்லஸ், ஆதம்ஷா முன்னிலை வகித்தனர். சிறப்பு முகாமை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தொடங்கி வைத்தார்.
பின்னர், அவர் அளித்த பேட்டி:
வணிகர் குடும்ப நல உதவியை ரூ.5 லட்சமாக உயர்த்தி ஆணையிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதோடு, முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த உள்ளோம். தமிழகம் முழுவதும் உள்ள வணிகர்களை கட்டணம் இல்லாமல் வணிகர் நல வாரியத்தில் சேர்க்கும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கிளைச் சங்கத்திலும் உள்ள வணிகர்களை 100 சதவீதம் நல வாரியத்தில் சேர்க்கும் கிளைகளுக்கு தங்க காசு பரிசு வழங்கப்படும்.
மாம்பழத்தை கல் வைத்து பழுக்க வைப்பதாக மக்கள் சாப்பிட பயப்படுகின்றனர். இதுகுறித்து வியாபாரிகளை அழைத்து ஆலோசனை செய்து வருகிறோம். புகைமூட்டம் செய்துதான் மாம்பழம் பழுக்க வைக்க வேண்டும். மக்கள் வாங்கி சாப்பிட்டால் மட்டும்தான் மாம்பழம் அதிகம் விற்பனைக்கு வரும். பாதிக்கப்படுகின்ற விவசாயிகளுக்கு அரசு தலையிட்டு இழப்பீடு வழங்க வேண்டும். வியாபாரிகள் முறையாக பில் போட்டு செல்ல வேண்டும். சிறு வியாபாரிகளை வணிக வரித்துறை அதிகாரிகள் துன்புறுத்துவதில்லை. இவ்வாறு கூறினார்.
The post மாம்பழம் விற்பனை குறைவால் பாதித்த விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்: விக்கிரமராஜா கோரிக்கை appeared first on Dinakaran.