மாம்பழங்களை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து 9 பேர் பலி: 13 பேர் படுகாயம்

3 hours ago 3


திருமலை: ஏரிக்கரை வளைவில் வாகனத்தை முந்திச்சென்றபோது, மாம்பழ லோடு லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பெண்கள் உள்பட 9 பேர் இறந்தனர். 2 குழந்தைகள் உள்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர். ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் ஷெட்டிகுண்டா எஸ்டி காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் 22 பேர் நேற்று ராஜம்பேடு அருகே உள்ள இசுகுபள்ளி கிராமத்திற்கு மாம்பழங்களை பறிக்க சென்றனர். அங்கு மாம்பழங்களை பறித்து லாரியில் ஏற்றினர். பின்னர் அந்த லாரியில் தொழிலாளர்களும் ஏறிக்கொண்டு கோடூர் மாம்பழ சந்தைக்கு சென்றனர். அவர்களுடன் சில கூலித்தொழிலாளர்களின் குழந்தைகளும் சென்றனர்.

நள்ளிரவில் லாரி ரெட்டிபல்லே ஏரிக்கரை வளைவில் சென்றது. அப்போது, முன்னால் சென்ற வாகனத்தை முந்திச்செல்ல மாம்பழ லோடு லாரி டிரைவர் முயன்றார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் லாரியின் அடியில் சிக்கிய துர்கையா, வெங்கடேசு, னு, ரமணா, சுப்பரத்னம்மா, சித்தம்மா, லட்சுமிதேவி, ராதா, வெங்கட சுப்பம்மா ஆகிய 9 பேரும் பரிதாபமாக இறந்தனர். மேலும் டிரைவர், குழந்தைகள் உள்பட 13 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து, பொதுமக்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராஜம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இறந்தவர்களின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

The post மாம்பழங்களை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து 9 பேர் பலி: 13 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Read Entire Article