மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி ஊராட்சிக்குட்பட்ட பேரூரில், ரூ.4276.44 கோடி மதிப்பில் 85.51 ஏக்கர் பரப்பளவில் உருவாகும் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னையில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், கடந்த 2003-2004ம் ஆண்டு தொலைநோக்கு திட்டமான கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் காட்டுப்பள்ளி, செங்கல்பட்டு மாவட்டம் இசிஆர் சாலை, நெம்மேலி ஊராட்சியில் சூளேரிக்காடு என 2 இடங்களில் நாளொன்றுக்கு தலா 10 கோடி லிட்டர் கொள்திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள் அமைக்கப்பட்டு, சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. இந்த 2 சுத்திகரிப்பு நிலையங்கள் சென்னையின் மொத்த குடிநீர் தேவையில் 35 சதவீதத்தை பூர்த்தி செய்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி ஊராட்சிக்குட்பட்ட பேரூர் பகுதியில் இசிஆர் சாலையையொட்டி 85.51 ஏக்கர் பரப்பளவில் ரூ.4276.44 கோடி மதிப்பீட்டில் ஜப்பான் பன்னாட்டு முகமை நிதியுதவியுடன், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் 400 மில்லியன் லிட்டர் கடல் நீரை சுத்திகரிக்கும் வகையில், 3வது ஆலை ஆசியாவிலேயே எந்த நாட்டிலும் இல்லாத வகையில் மிக பிரமாண்டமாக அமைகிறது.
இந்த 3வது ஆலையின் கட்டுமான பணிக்கு கடந்த 2023ம் ஆகஸ்ட் 21ம் தேதி தலைமை செயலகத்தில் இருந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், 3வது ஆலையின் கட்டுமான பணி போர்க்கால அடிப்படையில் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணியில் தனியார் நிறுவன ஊழியர்கள் இரவு, பகல் பாராமல் தொடர்ந்து வேலை செய்து வருகின்றனர். அவ்வப்போது, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்துகின்றனர்.
The post மாமல்லபுரம் அருகே பேரூரில் ரூ.4276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணி தீவிரம் appeared first on Dinakaran.