
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூர் அருகே உள்ள மேலாடி பகுதியை சேர்ந்தவர் 26 வயது கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் செய்து வைக்க, அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து திருமணத்துக்கு பெண் பார்த்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் தமிழகத்தில் திருப்பூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுடன் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தது. இரு குடும்பத்தினரும் பத்திரிகை அச்சடித்து உறவினர்களுக்கு கொடுத்தனர்.
மாப்பிள்ளை வீட்டில் திருமணம் நடக்க இருந்தது. இதற்கு முந்தையநாள் நிச்சயதார்த்தத்துக்காக பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டுக்கு வந்தனர். மணப்பெண்ணும், மாப்பிள்ளையும் மணமேடைக்கு வந்தனர். தாலி கட்டுவதற்கு சில நிமிடங்கள் இருந்தது. அப்போது மணப்பெண், மறையூர் போலீசாரை தனது செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, தனக்கு இந்த மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்றும், தனது விருப்பத்துக்கு மாறாக திருமணம் நடைபெறுவதாகவும், உடனடியாக திருமணத்தை நிறுத்துமாறும் போலீசாரிடம் கெஞ்சினார். இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்றனர். இதனைக்கேட்ட மாப்பிள்ளை மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக இரு வீட்டாரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்பிறகு திருமணம் நிறுத்தப்பட்டது. இரு குடும்பத்தாரையும் சமாதானமாக பிரிந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். அதன்பேரில் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இதற்கிடையே திருமணத்திற்காக ஏற்பாடு செய்த உணவு பயன்படுத்தாமல் வீணானது. மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறி மணமேடையிலேயே திருமணத்தை நிறுத்திய திருப்பூர் பெண்ணால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.