"மாநிலங்களவை சீட்.. அ.தி.மு.க. வாக்குறுதி உண்மை" - தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ்

4 hours ago 2

சென்னை,

தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக அ.தி.மு.க. வாக்குறுதி கொடுத்தது உண்மை தான் என்றும், நேரம் வரும்போது வெளிப்படுத்துவோம் என்றும் தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியை விட்டு அ.தி.மு.க. விலகினாலும் நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டோம். இப்போது அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இனி, மீண்டும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தே.மு.தி.க. அந்த கூட்டணியில் தொடர்வதா.. வேண்டாமா என்பதை எங்களது பொதுச்செயலாளர் உரிய நேரத்தில் முடிவு செய்வார்.

ஜனவரி 9-ஆம் தேதி கடலூரில் தே.மு.தி.க. மாநாடு நடைபெற உள்ளது. அதில், தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பதை கட்சியின் பொதுச்செயலாளர் முறைப்படி அறிவிப்பார். தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக அ.தி.மு.க. முன்னமே வாக்கு கொடுத்தார்கள். முழுக்க முழுக்க உண்மை இது. நேரம் வரும்போது அனைத்தையும் வெளிப்படையாகச் சொல்வேன்.

அ.தி.மு.க. அளித்த உத்தரவாதத்தால் தான் நான் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. இதற்கு முன் நான் 2009-ம் ஆண்டு கள்ளக்குறிச்சியிலும் 2014-ம் ஆண்டு சேலத்திலும் போட்டியிட்டேன். சேலத்தில் எனக்காக மோடி பிரச்சாரம் செய்தார். 2019-ம் ஆண்டு மீண்டும் பா.ஜ.க. கூட்டணியில் கள்ளக்குறிச்சியில் போட்டியிட்டேன். 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் யோசிக்கிறேன்.

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பெறுவதில் எங்களுக்கும் விருப்பம் உண்டு. உகந்த வாய்ப்பு கிடைக்கும் போது அதைப் பற்றி கண்டிப்பாகப் பேசுவோம். அதற்கான தகுதியும் எங்கள் கட்சிக்கு உள்ளது" என்று எல்.கே.சுதீஷ் கூறினார். 

Read Entire Article