
தூத்துக்குடி,
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கடந்த 3-ந்தேதி(திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் வெகு விமரிசையாக மாசி திருவிழா நடைபெறும் நிலையில், திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
திருவிழாவை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் இருந்து மாலை அணிந்து பாதயாத்திரையாக கோவிலுக்கு வருகின்றனர். அவர்கள் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
அத்துடன், விடுமுறை தினமான இன்று ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளதால், கோவில் வளாகம், கடற்கரைப் பகுதி, நாழி கிணறு, முக்கிய சாலைகள் முழுவதும் பக்தர்களால் நிறைந்து காணப்படுகிறது. பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.