
பனாஜி,
கோவா மாநிலம் பாம்போலிம் நகரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் உள்ள டாக்டர் நோயாளிகளுக்கு சரிவர சிகிச்சை அளிக்கவில்லை என்றும் மரியாதை குறைவாக நோயாளிகளை நடத்துவதாகவும் சுகாதாரத்துறை மந்திரி விஷ்வஜித் ரானாவுக்கு செல்போன் மூலம் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக மந்திரி விஷ்வஜித் ரானா மருத்துவமனைக்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு பணியில் இருந்த டாக்டரை மந்திரி கடுமையாக சாடினார். நீங்கள் உங்கள் நாவை அடக்க வேண்டும். நீங்கள் ஒரு டாக்டர். நான் பொதுவாக கோபப்படுவதில்லை. ஆனால் நீங்கள் சரியாக நடக்கவேண்டும். நீங்கள் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும். நீங்கள் இங்கு அகங்காரத்துடன் வேலை பார்க்கக்கூடாது. உங்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்கிறேன்' என்றார். டாக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் அவர் மீது துறை ரீதியிலான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.