பாட்னா: பீகாரில் பாஜக தலைமையிலான தே.ஜ. கூட்டணி ஓட்டுத் திருட்டில் ஈடுபட முயலுவதாக ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம், புதிய தொழிலாளர் விதிமுறைகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலைமை ஆகியவற்றை கண்டித்து பீகார் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் பாட்னாவில் உள்ள மாநில வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து பேரணியாக சென்றனர். இந்த முழு அடைப்புப் போராட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, ராஷ்டிரிய ஜனதா தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பாட்னாவில் நடந்த பேரணியில் ராகுல் காந்தி கூறியதாவது; மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து மகாராஷ்டிரம் மற்றும் ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றன. மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிரத்தில் பெரும்பான்மை இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது. சில மாதங்களில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் மோசமாக தோற்றது. தோற்றவுடன் நாங்கள் எந்த கருத்தும் சொல்லவில்லை. தரவுகளை ஆராயத் தொடங்கினோம். ஒரு கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதை அறிந்தோம். வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்ட தொகுதிகளில் பாஜக வென்றது.
தேர்தல் ஆணையத்திடம் புதிய வாக்காளர்களின் பட்டியல் கேட்டால் அமைதியாக இருக்கின்றனர். இதுவரை எங்களுக்கு கொடுக்கப்படவில்லை. மராட்டிய சட்டமன்ற தேர்தலில் பாஜக செய்த முறைகேட்டை நான் அம்பலப்படுத்தினேன். மகாராஷ்டிரத்தில் நடந்ததை போன்று, பீகாரிலும் வாக்குத் திருட்டுக்கு முயற்சி செய்கின்றனர். ஆனால், அவர்களுக்கு தெரியாது பீகார் மக்கள் இதை நடக்க விடமாட்டார்கள் என்று. தேர்தல் ஆணையம் அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டும். ஆனால், பாஜக அறிவுத்தல்படி செயல்படுகிறது என தெரிவித்தார்.
The post மராட்டிய தேர்தல் மோசடியை தொடர்ந்து பீகாரில் ஒட்டுத் திருட்டில் ஈடுபட பாஜக முயற்சி: ராகுல் காந்தி கண்டனம் appeared first on Dinakaran.