
திருத்துறைபூண்டி,
சிலை திருட்டு வழக்கில் மூன்று குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்ட விவரம்:-
கடந்த 19.2.2009 அன்று இரவு நேரத்தில் திருவாரூர் மாவட்டம், திருத்துறைபூண்டி, பவளதீஸ்வரர் கோவிலின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைந்து கற்பகிரகத்தின் தலைவாசலையும் உடைத்து ஒரு மரகதலிங்கம் (ஒரு கிலோ எடை) மற்றும் இரண்டு தங்க ஆபரணங்களை மர்ம நபர்கள் திருடினர்.
இதுகுறித்து 20.2.2009 அன்று மேற்சொன்ன திருத்துறைபூண்டி, பவளதீஸ்வரர் கோவிலின் செயல் அலுவலர் கனகசபை கொடுத்த புகாரில், ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் மதிப்புள்ள ஒரு மரகதலிங்கம் (ஒரு கிலோ எடை) மற்றும் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு தங்க ஆபரணங்கள் (திருமாங்கல்யம்) என மொத்தம் மதிப்பு ரூ. 2 லட்சத்து 6 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் களவு போனதாக திருதுறைப்பூண்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில் 25.10.2009 அன்று கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேற்சொன்ன வழக்கில் தொடர்புடைய ரமேஷ் மற்றும் செந்தில் ஆகியோரை கைது செய்து மேற்சொன்ன பொருட்களை கைப்பற்றினர். இதனையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவின்கீழ் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தஞ்சாவூரைச் சேர்ந்தவர்களான ஆறுமுகம் மகன் ரமேஷ், பிச்சை மகன் செந்தில் ஆகியோர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த வேலன் மகன் வைத்தி (எ) வைத்தியலிங்கம், தஞ்சாவூரைச் சேர்ந்த ஜார்ஜ் மகன் மெர்லின்சகாயராஜ், தஞ்சாவூர் ஐயப்பன், நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்களான சுப்பரமணியம் மகன் ராஜா(எ) பட்சிராஜா, ஆறுமுகம் மகன் கருணாநிதி, ராஜதுரை மகன் விஜி(எ) விஜயன், முத்துப்பேட்டை காந்தி மகன் சுதாகர் ஆகியோர் வெவ்வேறு தேதிகளில் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து மேற்சொன்ன அனைவரின் மீதும் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களிடமிருந்து பறிமுதல் செய்த பொருட்கள் நீதிமன்றம் மூலமாக புகார்தாரரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இவ்வழக்கின் விசாரணை நடைப்பெற்ற போதே செந்தில் மற்றும் ஐயப்பன் ஆகியோர் மரணமடைந்துவிட்டனர். ரமேஷ், கருணாநிதி, விஜி(எ) விஜயன் மற்றும் சுதாகர் ஆகியோருக்கு பிடியாணை நிலுவையில் உள்ளன. வைத்தி(எ) வைத்தியலிங்கம், மெர்லின்சகாயராஜ், ராஜா(எ) பச்சிராஜா ஆகியோருக்கு வழக்கு பிரிக்கப்பட்டு நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டது. பிடியாணை நிறைவேற்ற தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
16.6.2025 அன்று சென்னை எழும்பூர், பெருநகர முதன்மை குற்றவியல் நடுவர் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கினார். இதன்படி வைத்தி(எ) வைத்தியலிங்கத்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மெர்லின் சகாயராஜ், ராஜா (எ) பச்சிராஜா ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட அனைத்து அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு சிலை கடத்தல் தடுப்புபிரிவின் காவல்துறை கூடுதல் டி.ஜி.பி. கல்பனாநாயக் பாராட்டினார். மேலும் இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட அனைவரையும் தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி. சங்கர்ஜிவால் பாராட்டினார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.