
நீலகிரி மாவட்டம் ஊட்டி பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 13 வயதில் மகன், 11 வயதில் மகள் உள்ளனர். மகன், ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு, மகள் 7-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்களது தந்தை தொழிலாளியாகவும், தாய் தனியார் தங்கும் விடுதியிலும் பணிபுரிந்து வருகின்றனர். அந்த 7-ம் வகுப்பு மாணவியும், பக்கத்து வீட்டை சேர்ந்த டிரைவர் ஒருவரது 7 வயது மகளும் தோழிகள்.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக கண் பார்வை பிரச்சினை ஏற்பட்டதால் 7 வயது சிறுமியின் தந்தை தனது வேலையை விட்டு விட்டு வீட்டில் இருந்து வந்தார். அவரது மனைவி வெளியூரில் தங்கி பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் 7-ம் வகுப்பு மாணவி தனது தோழியான 7 வயது சிறுமியுடன் நீண்ட நேரம் விளையாடிக் கொண்டிருந்தாள்.
போக்சோவில் கைது
பின்னர் ஒரு கட்டத்தில் 2 பேரும், 7 வயது சிறுமியின் வீட்டுக்கு சென்றனர். அப்போது டிரைவர் தனது மகளின் கண் முன்னே, 7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். மேலும் அவர் தனது மகளை வெளியே அனுப்பி விட்டு, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன மாணவி, வீட்டை விட்டு வெளியே வந்து சத்தம் போட்டாள். உடனடியாக அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் டிரைவரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஊட்டி ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, டிரைவரை போலீசார் கைது செய்தனர்.