மன்னார்குடி, மே. 11 : மன்னார்குடி வட்ட காவல் நிலையத்தில் தீடிர் ஆய்வு மேற்கொண்ட தஞ்சை சரக டிஐஜிபொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை போலீசாருக்கு அறிவுறுத்தினார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்ட காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் தஞ்சை சரக டிஐஜி ஜியா வுல் ஹக் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவரை டிஎஸ்பி மணிகண்டன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் வரவேற்றனர்.
முதலாவதாக, காவல் நிலையத்தில் சுற்றுப்புறத்தை பார்வையிட்ட சரக டிஐஜி அங்கு நிறுத்தப்பட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட வாகனங்களை பார்வையிட்டு,விசாரணை கைதிகளின் அறைகளை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, மன்னார்குடி வட்ட காவல் ஆய்வாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட மன்னார்குடி டவுன், தாலுக்கா மற்றும் தலையாமங்கலம் காவல் நிலையங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக பதிவான வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகள், சாலை விபத்துகளை தவிர்க்க மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை புகார்கள் மீது எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கைகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் விபரங்கள் உள்ளிட்ட கோப்புகளை டிஐஜி ஜியா வுல் ஹக் ஆய்வு செய்தார். மன்னார்குடி வட்டத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், ரவுடிகள் மீது கண்காணிப்பு, திருட்டை குறைக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து டிஎஸ்பி மணிகண்டன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் ஆகியோரிடம் அறிவுறுத்தினார்.
முக்கியமாக, ரவுடிகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி, குட்கா கஞ்சா விற்பனை மற்றும் பதுக்கலில் ஈடுபடுவோர் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, போலீசாருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர், காவல் நிலைய வளாகத்தில் தஞ்சை சரக டிஐஜி மரக்கன்றுகளை நட்டார்.
The post மன்னார்குடி வட்டர காவல் நிலையத்தில் ஆய்வு; பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் கடும் நடவடிக்கை appeared first on Dinakaran.