மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்

2 hours ago 4

புதுடெல்லி,

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜனாதிகாரா சங்கர்ஷ பரிஷத் அமைப்பின் துணைத் தலைவர் ஆதர்ஷ் ஐயர் மனுத்தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது.இதைத் தொடர்ந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டிப் பணம் பறித்த புகாரில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் மீது பெங்களூரு திலக் நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யபட்டது. மத்திய மந்திரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் குற்றவாளி என்பதால் நிதி மந்திரி உடனடியாக பதவி விலக வேண்டும். தேர்தல் பத்திரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்து வருகிறது. அதை மீண்டும் வலியுறுத்துகிறோம்' என்று தெரிவித்தனர்.

தேர்தல் பத்திர முறைகேடு விவகாரத்தில் நிதி மந்திரி தன்னிச்சையாக செயல்பட முடியாது என தெரிவித்த காங்கிரஸ் நிர்வாகிகள், இதில் நம்பர் 1, 2 யார் என்பதும், யார் வழிகாட்டுதலில் இவை நடந்தது என்பதும் நமக்கு தெரியும் என்றும் கூறினர்.

Read Entire Article