புதுடெல்லி,
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நடந்து வரும் 3-வது ஆட்சியில் முழு அளவிலான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. வரி குறைப்புக்கான நம்பிக்கை மற்றும் வளர்ச்சிக்கான தேவை ஆகியவற்றை சமஅளவில் உள்ளடக்கிய பட்ஜெட்டாக இது பார்க்கப்படுகிறது.
2026-ம் நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 6.3-6.8 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. பொருளாதார ஆய்வறிக்கையானது நிலம், தொழில் ஆகியவற்றில் சீர்திருத்தங்கள் மற்றும் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை அடைவதற்காக விதிகளில் தளர்வு ஆகியவற்றை வலியுறுத்துகிறது.
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், மத்திய பட்ஜெட்டை நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன் மூலம், தொடர்ச்சியாக 8 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதிமந்திரி என்ற பெருமையை அவர் பெற்றார்.
2025-26-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:-
* பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, மாத சம்பளம் பெறும் நபர்கள் அதிகம் எதிர்பார்த்த வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் பற்றிய விவரம் வெளியிடப்பட்டது.
இதன்படி, தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு வருவாய் ரூ.12 லட்சம் பெறுபவர்களுக்கு வருமான வரி இருக்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், மாதத்திற்கு ரூ.1 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்கள் இனி வரி செலுத்த தேவை இருக்காது. 2023-ம் ஆண்டில் வருமான வரி உச்ச வரம்பு ரூ.7 லட்சம் என்ற அளவில் உயர்த்தப்பட்டு இருந்தது. இந்த உச்ச வரம்பு ரூ.12 லட்சம் என்ற அளவில் உயர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளது.
* சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் உச்சவரம்பு ரூ.10 கோடியாக உயர்தப்படுகிறது.
* உலக அளவில் பொம்மை தயாரிப்பு மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
* 5 லட்சம் எஸ்.சி., எஸ்.டி., பெண் தொழில் முனைவோருக்கு ரூ.2 கோடி வரை கடன் வழங்கப்படும்.
* பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயம் செய்யப்படுகிறது.
* மக்கானா ( தாமரை விதைகள்) உற்பத்தியை அதிகரிக்க மக்கானா வாரியம் அமைக்கப்படும்.
* அசாமில் 12.7 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உற்பத்தி செய்யும் விதமாக தொழிற்சாலை அமைக்கப்படும்.
* 2025-26ஆம் நிதியாண்டில் நாட்டில் 200 புற்றுநோய் மையங்கள் அமைக்கப்படும்.
* சுவிகி, சோமோட்டோ உள்ளிட்ட ஆன்லைன் செயலி ஊழியர்களுக்கு அரசு சார்பில் அடையாள அட்டை வழங்கப்படும். இதன்மூலம் ஒரு கோடி ஊழியர்கள் பயன்பெறுவர்.
* சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவி ரூ.30,000 ஆக அதிகரிக்கப்படும்.
* புதிய வரி சீர்திருத்தத்தில் நடுத்தர வருமான வகுப்பினருக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்,
* புதிய வருமான வரி மசோதாவில் பழைய சட்டங்களில் உள்ள சரத்துகளில் 50 சதவிகிதம் இடம்பெறும்.
* விவசாயிகளுக்கான 'கிசான் கிரெடிட் கார்டு' உச்சவரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்.
* தனம், தானிய கிஷான் திட்டம் மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தில் உற்பத்தி குறைவாக உள்ள 100 மாவட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
* வேலைவாய்ப்புகளை எளிதாக்கும் வகையில் மக்கள் வாழக்கூடிய இடங்களிலேயே தொழில்துறையை உருவாக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ளும்.
* சிறு குறு நிறுவனங்களுக்கு ரூ.20 கோடி கடன் உத்தரவாதம் வழங்கப்படும்.
* ஏ,ஐ. (AI) தொழில்நுட்பத்தை விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கு பயன்படுத்தும் வகையில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* ஆன்லைன் தொழில் சார்ந்த ஊழியர்களுக்கு புதிய காப்பீட்டு திட்டம் கொண்டுவரப்படும்.
* அணு உலைகள் மூலம் 2047-ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.
* 52 சுற்றுலாத் தளங்கள் மாநில அரசின் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும்.
* அடுத்த வாரம் புதிய வருமான வரி சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
* வெளிநாட்டு முதலீடுகளை அதிகளவில் ஈர்க்க தனி அமைப்பு உருவாக்கப்படும்.
* பருப்பு உற்பத்தியை அதிகரிக்க 6 ஆண்டு திட்டம் செயல்படுத்தப்படும்.
* சுகாதாரம், வேளாண் உள்ளிட்ட 3 துறைகளில் ஏ.ஐ. (AI) மையம் அமைக்கப்படும்.
* 36 உயிர் காக்கும் புற்றுநோய் மருத்துகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.
* அடுத்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் 10,000 கூடுதல் இடங்கள் ஏற்படுத்தப்படும்.
* உள்கட்டமைப்பு முதலீடுகளுக்காக ரூ.1.5 லட்சம் கோடி, மாநிலங்களுக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படும்.
* அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.
* ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் என்ற திட்டத்தில் 100 சதவீத இலக்கை அடைய, ஜல் ஜீவன் திட்டம் 2028ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்படுகிறது.
* பாரத் நெட் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள அரசு உயர்நிலை பள்ளிகளில் பிராட்பேண்ட் இணைய வசதி செய்யப்படும்.
* கடன்களுக்கு வட்டி செலுத்த 2025-26 பட்ஜெட்டில் ரூ12.76 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஓதுக்கீடு
பாதுகாப்புத்துறை – ரூ.4.91 லட்சம் கோடி
ஊரக வளர்ச்சித்துறை – ரூ.2.66 லட்சம் கோடி
உள்துறை – ரூ.2.33 லட்சம் கோடி
விவசாயம் – ரூ.1.17 லட்சம் கோடி
கல்வி – ரூ.1.28 லட்சம் கோடி
மருத்துவம் – ரூ.98,311 கோடி
நகர்ப்புற வளர்ச்சி – ரூ.96,777 கோடி
தகவல் தொழில்நுட்பம் – ரூ.95,298 கோடி
ஆற்றல் – ரூ.81,174 கோடி
வர்த்தகம் – ரூ.65,553 கோடி
சமூக நலன் – ரூ.60,052 கோடி
அறிவியல் சார்ந்த துறைகள் – ரூ.55,679 கோடி
இதனைத்தொடர்ந்து பட்ஜெட் உரை முடிந்த நிலையில் பிப்.3-ம் தேதிக்கு நாடாளுமன்ற அவைகள் ஒத்திவைக்கப்பட்டன.