
புதுடெல்லி,
ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் தங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகக் கூறி, அந்த நாடு மீது கடந்த 13-ம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானின் அணு ஆயுதத் தளங்கள், அணு விஞ்ஞானிகள் உள்ளிட்ட அணுசக்தித் துறையை குறிவைத்து இஸ்ரேல் தாக்கியது. அத்துடன் அந்த நாட்டின் ராணுவ நிலைகள், எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் உள்ளிட்ட பிற பகுதிகளையும் தாக்குதலுக்கு இலக்காக்கி வருகிறது.
தங்கள் போர் விமானங்கள் மூலம் ஈரான் முழுவதும் பரவலாக இஸ்ரேல் அதிரடித் தாக்குதலை அரங்கேற்றி வருகிறது. இதற்கு பதிலடியாக, ஈரானும் இஸ்ரேல் மீது அலை அலையாக ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி வருகிறது. இதில் இஸ்ரேலும் பலத்த சேதங்களைச் சந்தித்து வருகிறது.
மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் இந்த ராணுவ மோதல் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. நேற்றும் இரு நாடுகளும் தங்கள் மோதலை எவ்விதக் குறையுமின்றி தொடர்ந்தன. இந்த நிலையில், ஈரான் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியது. ஈரானில் உள்ள போர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களை நடத்த பி-2 பாம்பர் ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. இதனால், மத்திய கிழக்கில் உச்சகட்டப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பதற்றமான சூழலில், ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசி வழியாகப் பேசியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: "ஈரானில் நடைபெற்று வரும் போர் குறித்து ஆழ்ந்த கவலையைப் பகிர்ந்து கொண்டேன். பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வலியுறுத்தினேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.