
இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டை யார் பிரிக்க நினைத்தாலும் அவர்களை தமிழ்நாட்டு மக்கள் விட மாட்டார்கள். மத்திய அரசும் விடாது என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் நடந்த அரசு விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "மத்திய அரசு ஏற்படுத்தும் தடைகளை சட்டபூர்வமாக ஒவ்வொன்றாக உடைப்போம். மற்ற மாநிலங்களைப் போல ரெய்டுகளால் கட்சிகளை உடைக்கும் பார்முலா தமிழ்நாட்டில் எடுபடாது. இங்குள்ள சிலரை மிரட்டி கூட்டணி வைத்துள்ள நீங்கள் ஜெயிக்க முடியுமா?. எந்த ஷா வந்தாலும் எங்களை ஆள முடியாது. டெல்லி ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்கும் அடிபணியாது. அப்படியொரு தனித்தன்மை கொண்டவர்கள் நாங்கள். எங்கள் தமிழ்நாடு டெல்லிக்கு எப்பவும் அவுட் ஆப் கன்ட்ரோல் தான்" என, தன்னிலை மறந்து பேசியிருக்கிறார்.
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஏற்பட்ட பிறகு ஸ்டாலினுக்கு ஏற்பட்ட பதற்றம், இன்னும் தணியவில்லை என்பதை, பொன்னேரியில் அவரது பேச்சு உறுதிப்படுத்துகிறது. அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறாது என்றால், அதுபற்றி ஸ்டாலின் ஏன் கவலைப்பட வேண்டும்.
காங்கிரசின் கூட்டணிக்காக பிரணாப் முகர்ஜியிடமும், குலாம்நபி ஆசாத்திடமும், கைகட்டி நின்றவர்கள் யார்?, 2011-ல் அண்ணா அறிவாலயத்தின் மாடியில் அன்றைய காங்கிரஸ் அரசு நடத்திய ரெய்டுக்கு அஞ்சி நடுங்கி, காங்கிரசுக்கு 63 தொகுதிகளை வாரி வழங்கியவர்கள் யார், இந்திரா காந்திக்கு அஞ்சி நடுங்கி கச்சத்தீவை தாரைவார்க்க உதவியது யார்? என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. அதை தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள்.
இந்தியா என்பது ஒரே நாடு. இந்தியா என்ற நாடு உருவான பிறகே, நிர்வாக வசதிக்காக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இப்போதும் பிரிக்கப்பட்டு வருகின்றன. மத்தியில் ஆளும் கட்சியோடு, அரசியல் ரீதியாக மாநிலத்தை ஆளும் கட்சி முரண்படலாம். ஆனால், மத்திய அரசோடு, மாநில அரசு மோதுவது ஆரோக்கியமானது அல்ல.
மத்திய உள்துறை மந்திரி தமிழ்நாடு வந்து சென்ற பிறகு, அவரைப் பற்றியே முதல்-அமைச்சர் ஸ்டாலின் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர், இந்தியாவின் உள்துறை மந்திரி. தமிழ்நாட்டையும் சேர்த்துதான் அவர் ஆண்டு கொண்டிருக்கிறார்.
தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவின் 28 மாநிலங்களும், 8 யூனியன்பிரதேசங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. எப்போதும் அப்படித்தான் இருக்கும். ஸ்டாலின் வாய் சவடால் விடலாம். அதனால் எந்தப் பலனும் இருக்கப் போவதில்லை. இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டை பிரிக்கலாம் என யார் நினைத்தாலும் அவர்களை தமிழ்நாட்டு மக்களும் விட மாட்டார்கள். மத்திய அரசும் விடாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.