சென்னை: திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து இன்று முதல் தொகுதிதோறும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என துணை முதல்வரும் அக்கட்சியின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: திமுக இளைஞரணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் அன்மையில் நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், புதிய கல்விக்கொள்கை மூலம் இந்தியை திணிக்கும், நிதிநிலை அறிக்கையில் தமிழகம் என்ற பெயரை முற்றிலுமாக புறக்கணித்து நிதிப் பகிர்வில் பாரபட்சம் காட்டும், தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்தை வஞ்சித்து அநீதி இழைக்கும் மத்திய அரசை கண்டிக்கும் வகையில் சட்டப்பேரவை தொகுதிதோறும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.