
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுரையில் முதல்-அமைச்சர் வருகைக்காக 3 மணி நேர போக்குவரத்து தடை செய்தார்கள். ரோடு ஷோவும், பொதுக்குழுவும் முடிந்துவிட்ட நிலையில் கூட, பாதுகாப்பு கட்டமைப்புகள் அகற்றப்படவில்லை. பொதுமக்கள் 3 மணி நேரம் போக்குவரத்து தடை காரணமாக சிரமப்பட்டனர். மதுரையை கைப்பற்ற தி.மு.க. விரும்பலாம். ஆனால் மக்கள் விரும்பவில்லை. உண்மையில் விரும்பியிருந்தால், கூட்டம் இன்னொரு சித்திரைத் திருவிழாவாக இருந்திருக்கும்.
மதுரையில் பொதுக்குழு நடத்தினால் ஒரு முறைக்கு மறுமுறை ஆட்சிக்கு வராத சுவாரசியம் தி.மு.க.விற்கு இருக்கிறது. மதுரையில் பொதுக்குழு கூட்டிய எப்போதும் வந்ததில்லை. கருணாநிதி இருந்தபோதும் வந்ததில்லை. தி.மு.க.வில் தலைவர் எம்.ஜி.ஆர். இருந்தவரை ஆட்சிக்கு வந்தார்கள். தி.மு.க.வை விட்டு எம்.ஜி.ஆர். வெளியே வந்த பிறகு 2-வது முறையாக தி.மு.க. ஆட்சிக்கு வந்ததே இல்லை.
மதுரையில் தி.மு.க.பொதுக்குழு எப்போதெல்லாம் கூடுகிறதோ, அப்போதெல்லாம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது. 1977-ல் நடந்த பொதுக்குழுவுக்கு பிறகு 12 ஆண்டுகள் அ.தி.மு.க ஆட்சிதான் வந்தது. தற்போது மதுரையில் பொதுக்குழு கூட்டத்தை நடத்தி தி.மு.க. தனக்கு தானே சூனியம் வைத்துக்கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.