![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/21/35090114-chennai-09.webp)
மதுரை,
மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கும், துபாய், இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது மதுரையில் இருந்து சென்னை வழியாக மலேசியாவுக்கு இரவு நேர விமான சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. இதனால், மதுரை விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்தநிலையில், பயணிகளின் வருகையை அடிப்படையாக கொண்டு, மதுரை உள்ளிட்ட 6 விமான நிலையங்களின் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, மதுரை, அகர்தலா, போபால், சூரத், உதய்பூர், விஜயவாடா ஆகிய விமான நிலையங்கள் ஏ.பி.டி. மூன்றாம் தர நிலையிலிருந்து, 2-ம் தர நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், அகில இந்திய அளவில், விமான நிலையங்களில் உள்ள பயணிகளின் வருகை, புறப்பாடு மற்றும் அதிகரிக்கும் விமான சேவை, பயணிகளின் உைடமைகளை சோதனையிடும் மையம் உள்ளிட்டவைகளை அடிப்படையாக கொண்டு, விமான நிலையங்களில் தரம் உயர்த்தப்படுகிறது.
அதன் அடிப்படையில், தற்போது மதுரை விமான நிலையம் 3-ம் தரநிலையில் இருந்து 2-ம் தரநிலைக்கு உயர்ந்துள்ளது. இதன் மூலம், மதுரை விமான நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்படும். கூடுதலாக விமான சேவைகள், சோதனை மையம், பயணச்சீட்டு மையம், அலுவலர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவை அதிகரிக்கப்படும் என தெரிவித்தனர்.