மதுராந்தகம்: மதுராந்தகத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் அணுகு சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த, 14 கடைகளை நகராட்சி ஆணையர் அபர்ணா தலைமையிலான பணியாளர்கள், போலீஸார் துணையுடன் இடித்து அகற்றினர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகரப் பகுதியில் பழைய வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தை அகற்றி, புதிதாக அப்பகுதியில் ரூ.1.20 கோடி மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், கட்டுமான பணிகள் விரைவில் நிறைவு பெறும் நிலையில் உள்ளதால், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்வதற்கு அணுகு சாலை அமைக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால், அணுகு சாலை அமைப்பதற்கான இடத்தை ஆக்கிரமித்து 14 கடைகள் மற்றும் அலுவலகங்கள் அமைத்திருந்ததாக தெரிகிறது. இதனால், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுமாறு ஆக்கிரமிப்பாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் 6 முறை நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது.