
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் நேற்று மதியம் 1.30 மணிக்கு பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. பஸ்சை விருதுநகரை சேர்ந்த டிரைவர் அருள்மூர்த்தி(வயது 50) ஓட்டினார். பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர்.
பொள்ளாச்சி அருகே கோமங்கலம் பகுதியில் சென்றபோது டிரைவர் குடிபோதையில் இருந்ததால் பஸ் தாறுமாறாக சென்றது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பஸ்சை நிறுத்துமாறு கூறியும், நிறுத்தாமல் அருள்மூர்த்தி இயக்கியதாக தெரிகிறது. தொடர்ந்து பயணிகள் கண்டித்ததை தொடர்ந்து அவர் பஸ்சை நிறுத்தினார்.
மேலும் போதை அதிகமானதால் தனது இருக்கையிலேயே அருள்மூர்த்தி சாய்ந்தார். அவரது இருக்கைக்கு அருகே குடிநீர் பாட்டிலில் மதுபானம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பயணிகள் பஸ்சை விட்டு இழே இறங்கி, கண்டக்டர் வெங்கடேசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து கோமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் மாற்று பஸ் வரவழைத்து, அந்த பஸ்சில் பயணிகளை போலீசார் ஏற்றி அனுப்பி வைத்தனர். மேலும் டிரைவர் அருள்மூர்த்தியை கோலார்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்ததில் அவர் குடிபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் போலீசார் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி டிரைவர் அருள்மூர்த்தியை பணியிடை நீக்கம் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.