திருப்பூர்: மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லை போட்டு முதியவரை கொலை செய்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் அம்மாபாளையம் பகுதியில் இன்று காலை தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் முதியவர் ஒருவர் பிணமாக கிடப்பதாக திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து கிடந்த முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூரை சேர்ந்த பிரிண்டிங் தொழிலாளி பாண்டி (51) என்பது தெரியவந்தது. பாண்டி உள்பட 3 பேர் நேற்றிரவு பகுதியில் ஒன்றாக மது குடித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட மோதலில் பாண்டி கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பாண்டி உடன் மது குடித்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post மது போதையில் தகராறு; தலையில் கல்லை போட்டு முதியவர் கொலை: திருப்பூரில் இன்று பயங்கரம் appeared first on Dinakaran.