வேதாரண்யம்: வேதை அருகே மதுகுடித்தால் அந்த நபரை நாள் முழுவதும் கோயில் தூணில் கட்டி வைப்பது, பெண்களை கேலி செய்தால் மொட்டையடித்துகொள்ள வேண்டும் என்று கிராம மக்கள் முடிவு செய்து பேனர் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி ஊராட்சியில் சிறுதலைக்காடு மீனவ கிராமம் உள்ளது. இங்கு 2,000க்கும் மேற்பட்ேடார் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மீன்பிடி தொழிலே பிரதானம். இந்த கிராமத்தில் மதுவுக்கு அடிமையான வாலிபர்களை நல்வழிப்படுத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதன்படி சிறுதலைக்காட்டில் கிராம தலைவர் நமகோடி தலைமையில் ஊர் கூட்டம் நேற்று நடந்தது.
ஊர் பஞ்சாயத்தார்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சிறுதலைகாடு கிராமத்தில் தொடர்ச்சியாக மது அருந்தி விட்டு பிரச்னைகளில் ஈடுபடும் நபர்களை பிடித்து மாரியம்மன் கோயில் தூணில் ஒருநாள் முழுவதும் கட்டி வைக்கப்படும். மேலும் மது குடித்து விட்டு ஓட்டி வரும் பைக்குகள் பறிமுதல் செய்யப்படும். பெண்களை பார்த்து கிண்டல் செய்தாலோ, காதல் என்று கூறி பின் தொடர்வதோ, மனதில் நெருக்கடி கொடுப்பதோ கூடாது. இதுபோல் யாராவது செய்வது தெரியவந்தால் கோயிலுக்கு முன்பாக குற்றம் செய்தவரே மொட்டை அடித்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இதைதொடர்ந்து பொதுமக்கள் நிறைவேற்றிய தீர்மானங்களை அச்சடித்து ஊர் பகுதியில் 2 இடங்களில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு பொதுமக்கள், பெண்கள் தரப்பில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிராம தலைவர் நாமகோடி கூறுகையில், வாலிபர்கள் தொடர்ச்சியாக குடித்து விட்டு விபத்தில் சிக்கி இறப்பதும், மது பழக்கத்தால் குடும்பங்கள் சீரழிவதை பார்த்து இந்த முடிவை எடுத்துள்ளோம். 2 இடங்களில் பேனர் வைத்துள்ளோம். எங்கள் ஊருக்கு என்று ஒரு கட்டுப்பாடு உண்டு என்றார். சிறுதலைக்காடு பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேனர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
The post மது குடித்தால் தூணில் கட்டி வைப்பு பெண்களை கேலி செய்தால் மொட்டை: கிராம மக்கள் முடிவு appeared first on Dinakaran.