காட்டுமன்னார்கோவில்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளையபெருமாள் 102வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழக காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் மணிரத்தினம் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் மணிமொழி வரவேற்றார்.
பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: இந்த தேசம் ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறது. ஆங்கிலம் பேசக்கூடாது என்று ஒன்றிய அமைச்சர் சொல்கிறார் என்றால் இந்த திமிர் எங்கிருந்து வந்தது. ஆங்கிலம் பேசக்கூடாது என்றால் ஒன்றிய அமைச்சர்களின் குழந்தைகள் அவர்கள் வீட்டின் பெண்கள் ஆங்கிலம் கற்றுக்கொண்டு வெளிநாடுகளிலே ஆங்கில பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் படித்து வருகிறார்கள்.
அப்படி என்றால் விளிம்பு நிலை மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆங்கிலத்தை கற்றுக்கொள்ளக் கூடாது என்கிற நிலையில் ஒரு ஆட்சி நடந்து வருகிறது. ஒன்றிய பாஜ அரசு தமிழக மக்களை வஞ்சிக்கிறது. தமிழகத்தை குறிவைத்து தாக்குகிறது. இப்போது முருகனை ஹைஜாக் செய்ய முயல்கிறார்கள். இதனால் முருகனை காப்பாற்ற வேண்டிய சூழல் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அயோத்தி போனால் ராமர் ராமஜென்ம பூமி. அது தோல்வி அடைந்ததால் ஜெய் ஜெகநாதர். அவரும் ஆதரவு கொடுக்காததால் பூரி ஜெகநாதர். இப்படி மாறி மாறி மதத்தை வைத்து இந்தியாவை பிளவுபடுத்த முயற்சி செய்து வருகிறார்கள். இப்போது நமது ஒரே எதிரி பாஜவை வீழ்த்துவது தான். இந்த தேசத்தை பாதுகாக்க வேண்டும். மக்களை காக்க வேண்டும். தமிழக மக்களின் ஏற்றத்தில் அனைவருக்கும் நம்பிக்கை உள்ளது. எனவே தமிழகத்திலிருந்து பாஜவை வெளியேற்ற வேண்டும். இவ்வாறு அவர்கூறினார்.
The post மதத்தை வைத்து இந்தியாவை பிளவுபடுத்த பாஜ முயற்சி: செல்வப் பெருந்தகை காட்டம் appeared first on Dinakaran.