![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/11/38902410-manpaure33.webp)
இம்பால்,
மணிப்பூர் பாஜக முதல்-மந்திரி பிரேன் சிங் தனது பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். புதிய ஆட்சி அமைவதற்கான சாத்தியம் இல்லாவிட்டால் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்தநிலையில், புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வது தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ.க்களுடன் மணிப்பூர் பாஜக பொறுப்பாளர் சம்பித் பித்ரா தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பிரேன் சிங்குக்கு நெருக்கமானவர்களாக கருதப்படும் மணிப்பூர் சபாநாயகர் தோக் சோம் சத்யபிரதா சிங், மந்திரிகள் ஒய்.கேம்சந்த், பசந்த்குமார் சிங், கோவிந்தா கோந்தோஜம், பாஜக எம்.எல்.ஏ ராதேஷியாம்,பிஸ்வஜித் சிங் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் குகி இன பாஜக எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் பங்கேற்கவில்லை. மேலும் மேலிட பொறுப்பாளர் சம்பித் பித்ரா நாக மக்கள் முன்னணி எம்.எல்.ஏ.க்களுடன் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டார். மணிப்பூர் புதிய முதல்-மந்திரி பதவிக்கு 5 பேர் பெயர் அடிபடுகிறது. ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட சபாநாயகர் மற்றும் 3 மந்திரிகள் முதல்-மந்திரிக்கான போட்டியில் உள்ளனர். இதற்கிடையே மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்துவதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.