டெல்லி: மணிப்பூர் மக்கள் உங்களையும் உங்கள் கட்சியையும் மன்னிக்க மாட்டார்கள் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மணிப்பூர் முதல்வராக இருந்த பிரேன் சிங் கடந்த 9ம் தேதி கவர்னர் அஜய் குமார் பல்லாவை சந்தித்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி, கவர்னரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதனையடுத்து அவரது ராஜினாமா கடிதத்தை அஜய் குமார் பல்லா ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மணிப்பூரில் அரசியலமைப்பு நெருக்கடி இருப்பதால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், கடந்த 11 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்து வருவதும், 8 ஆண்டுகளாக மணிப்பூரை ஆட்சி செய்ததும் பாஜக கட்சிதான். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பு மட்டுமன்று தேசியப் பாதுகாப்பு மற்றும் எல்லை ரோந்துக்கும் பாஜக அரசுதான் பொறுப்பு. அந்தவகையில், மாநிலத்தில் ஜனதிபதி ஆட்சியை அமல்படுத்தியதால், மணிப்பூர் மக்களை நீங்கள் தோல்வியடைய செய்ததற்கு நேரடி ஒப்புதலாகும்.
அரசு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது அது விரும்பியதால் அல்ல, மாநிலத்தில் அரசியலமைப்பு நெருக்கடி இருப்பதால் உங்கள் திறமையின்மையின் சுமையை ஏற்றுக்கொள்ள எந்த என்.டி.ஏ. எம்.எல்.ஏ.க்களும் தயாராக இல்லை. உங்கள் இரட்டை இயந்திரம் மணிப்பூர் அப்பாவி மக்களின் உயிர்களைக் கொன்றுவிட்டது. இந்தநேரத்தில் மணிப்பூருக்குச் சென்று துன்பப்படும் மக்களின் வலியையும் அதிர்ச்சியையும் கேட்டு, அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய நேரம் இது. மணிப்பூர் மக்கள் உங்களையும் உங்கள் (பாஜக) கட்சியையும் மன்னிக்க மாட்டார்கள் என பதிவிட்டுள்ளார்.
The post மணிப்பூரில் அரசியலமைப்பு நெருக்கடி இருப்பதால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே appeared first on Dinakaran.