மயிலாடுதுறை, மார்ச் 1: மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக மேல ஆத்தூர் பொன்னையன் மகள் தையல்நாயகி(30) பணிபுரிந்து வந்தார். இவருக்கும் நீடுரை அடுத்த கோவில்புத்தூர் பகுதியை சேர்ந்த ஜெய்கணேஷ் என்பவருக்கும் கடந்த 7 மாதம் முன்பாக திருமணம் நடந்துள்ளது. தையல்நாயகி தனது தந்தை வீட்டில் இருந்தே பணிக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (27ந்தேதி) இரவு பணிக்கு வந்த தையல்நாயகி 11 மணியளவில் பாத்ரூம் சென்ற போது. திடீரென மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து தையல்நாயகி 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் மணல்மேடு பஸ்ஸ்டாண்டு அருகில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
இதனையடுத்து அங்கு வந்த மயிலாடுதுறை டிஎஸ்பி பாலாஜி, தாசில்தார் விஜயராணி, மணல்மேடு இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். உரிய வகையில் விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறை தரப்பில் ்உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. உயிரிழந்த தையல்நாயகி உறவினர்களின் சாலை மறியல் போராட்டத்தினால், காலை 10.30 மணிமுதல் மாலை 5.30 மணி வரை மணல்மேடு வழியாக கும்பகோணம் மற்றும் சீர்காழி செல்லும் சாலையில் சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
The post மணல்மேடு திருமணமாகி 7 மாதத்தில் அரசு நர்ஸ் மர்ம சாவு appeared first on Dinakaran.