திருப்புத்தூர், மார்ச் 21: திருப்புத்தூர் அருகே மணல் கடத்திய வாலிபர் கைது செய்து, மணல் ஏற்றிச் சென்ற டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். திருப்புத்தூர் அருகே புதுப்பட்டி பகுதியில் மணல் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்ற திருப்புத்தூர் நகர் காவல் நிலைய எஸ்.ஐ. வைரமணி மற்றும் காவலர் பொன்னையா அங்கு மணல் கொட்டிக் கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அவர் திருப்புத்தூர் அருகே காரையூர் வடக்கு தெருவை சேர்ந்த முருகேசன் மகன் சதீஷ்குமார்(31) என்பதும், காரையர் பகுதியில் இருந்து மணல் திருடி வந்ததும், அவரிடம் உரிய ஆவணம் இல்லாததும் தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், மணலை ஏற்றி வந்த டிராக்டரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து திருப்புத்தூர் நகர் காவல் நிலைய போலீசார் வாகனத்தின் உரிமையாளர் சதீஷ் மற்றும் மணல் திருடி வந்த டிரைவர் சதீஷ்குமார் ஆகிய மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post மணல் கடத்திய வாலிபர் கைது appeared first on Dinakaran.