அறந்தாங்கி, ஜன.17: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் கதண்டு கூட்டினை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள ஒட்டாங்கரை கிராமம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு அருகே உள்ள கண்மாய் பகுதியில் உள்ள பனைமரத்தில் மிகப்பெரிய ராட்சத கதண்டு கூடு உள்ளது. இதன் அருகில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளதால் பக்தர்கள் அதிகமாக வந்து செல்லும் இடமாகவும், ஒட்டாங்கரை கிராம குடியிருப்புகளுக்கு செல்லும் வழியாகவும் இது உள்ளது. மேலும் கண்மாய்களுக்கு குளிக்க வருபவர்களும், வயலுக்கு செல்லக்கூடியவர்களும் இந்த பாதையை கடந்து செல்கின்றனர். இந்த வழியாக செல்லக்கூடிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயத்துடன் கடந்து செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன் பாதுகாப்பான முறையில் இந்த கதண்டு கூட்டை அப்புறப்படுத்தி, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post மணமேல்குடி அருகே பனை மர உச்சியில் கூடுகட்டி மக்களை அச்சுறுத்தும் கதண்டுகள் appeared first on Dinakaran.