கோவை சிறுவாணியில் இருந்து சரியாக 8 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது நாதகவுண்டன்புதூர் கிராமம். இயற்கை அழகு மிளிரும் இந்தக் கிராமத்தில் உள்ள தணிகாச்சலமூர்த்தியின் தோட்டம் ஒரு பசுமை பிரதேசமாகவே காட்சியளிக்கிறது. மஞ்சள், காய்கறிகள், பாரம்பரிய கிழங்கு வகைகள், பலவகையான மூலிகை மரங்கள் என திரும்பும் பக்கமெல்லாம் ஏதாவது ஒரு பயில் பச்சை கட்டி நிற்கிறது. இந்தத்தோட்டம் மலையடிவாரப் பகுதியில் இருப்பதால் பார்ப்பதற்கும், வசிப்பதற்கும் ஒரு ஆத்மார்த்த உணர்வைத் தருகிறது. தற்சார்பு வாழ்க்கை முறைக்காக இயன்றதை விளைவித்து பயன்படுத்தி வரும் விவசாயி தணிகாச்சலமூர்த்தியைச் சந்திக்க நாதகவுண்டன்புதூர் கிராமத்திற்குச் சென்றிருந்தோம். மஞ்சள் வயலில் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், எங்களைப் பார்த்ததும் மகிழ்வோடு வரவேற்றார். அவரது தோட்டம் முழுவதும் சுற்றிக் காண்பித்துவிட்டு பேச ஆரம்பித்தார்.
“வழி வழியாக எங்கள் குடும்பம் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறது. தாத்தாவும், அப்பாவும் மஞ்சள், கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்வதில் வல்லவர்கள். ஆனால், நான் கடந்த 8 வருடங்களாகத்தான் விவசாயம் பார்த்து வருகிறேன். நான் படித்தது மெக்கானிக்கல் இஞ்சினியரிங். தற்போதும் இஞ்சினியராகத்தான் வேலை பார்த்து வருகிறேன். வேலைக்காக பல மாநிலங்கள் சென்றிருக்கிறேன். எங்கு சென்றாலும் நல்ல ஆரோக்கியமான உணவுக்காக அலைந்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசை வந்தபிறகு அதை இயற்கை முறையில் செய்து மக்களுக்கு கொடுக்க வேண்டும். நஞ்சில்லா பொருட்களை விளைவித்து ஆரோக்கியமான வாழ்வை வாழ வேண்டும் என நினைத்து இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கினேன்.
எங்களுக்குச் சொந்தமாக 4.5 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. அதில், 1.75 ஏக்கரில் மஞ்சள் பயிரிட்டு இருக்கிறேன். கடந்த ஐந்து வருடங்களாக மஞ்சள் சாகுபடி செய்கிறேன். அதுவும் இயற்கை முறையில் விளைவிக்கிறேன். மஞ்சள் 10 மாதப்பயிர். இயற்கை முறையில் விவசாயம் செய்ய வேண்டும் என நினைத்த எனக்கு விதைக் கிழங்கு மட்டும் இயற்கை முறையில் கிடைக்கவில்லை. ஈரோடு, சேலம் பகுதிகளில் கிடைக்கும் மஞ்சள் விதைக் கிழங்குகள் அனைத்துமே செயற்கை முறையில் விளைவித்ததாக இருக்கிறது. அதனால், அதை வாங்காமல் இயற்கை முறையில் விளைவித்த கிழங்குகள் எங்கு கிடைக்கும் என தேடினேன். நண்பர் ஒருவரின் உதவியால் கேரளாவின் ஆலப்புலா பகுதியில் பழங்குடி மக்களால் மலைப்பகுதியில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட மஞ்சள் கிழங்குகளை 10 கிலோ வாங்கி வந்தேன். அதை எனது நிலத்தில் இயற்கை முறையில் விளைவித்தேன். தற்போது ஒரு டன் வரை விதைக்கிழங்குகள் என்னிடம் இருப்பு இருக்கிறது. முழுக்க முழுக்க இயற்கை முறையில்தான் விவசாயம். உழவில் இருந்து அறுவடை வரை அனைத்துமே இயற்கை முறைதான்’’ என்று தனது இயற்கை பயணம் குறித்து பகிர்ந்துகொண்டவர் மேலும் தொடர்கிறார்.
“ஒரு ஏக்கர் நிலத்தில் மஞ்சள் நடவு செய்ய சராசரியாக 600 கிலோ விதைக் கிழங்குகள் வரை தேவைப்படும். இயற்கை முறையில் மஞ்சள் விளைவிப்பதால் மஞ்சள் நடவு செய்யப்படும் நிலத்தில் நடவுக்கு முன்பாக உயிர் உரங்கள் கொடுக்கப்படுகிறது. அதன்பின் பசுஞ்சாணம் மற்றும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கரைசல்கள் என அனைத்தையும் சேர்த்து நிலத்தை தயார் செய்ய வேண்டும். அதன்பிறகு தண்ணீர் விட்டு மஞ்சள் கிழங்கை நடவு செய்யத் தொடங்கலாம். பொதுவாக எங்கள் பகுதியில் தென்மேற்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பு மஞ்சள் விதைக்கத் தொடங்குவோம். இந்த முறையும் அந்தப் பருவத்தில்தான் விதைத்திருக்கிறோம். மஞ்சள் செடியைப் பொருத்தவரை ஒரு செடிக்கும் அடுத்த செடிக்கும் இடையே 1.5 அடி இடைவெளி இருக்க வேண்டும். அதேபோல், ஒரு மஞ்சள் செடி வரிசைக்கும் அடுத்த மஞ்சள் செடி வரிசைக்கும் இடையே 20 அடி இடைவெளி இருக்க வேண்டும். இந்த அளவில் விதைத்தால்தான் மஞ்சள் நன்றாக வளரும். நான் எனது மஞ்சள் தோட்டத்தில் ஊடுபயிராக வெங்காயம் போட்டிருக்கிறேன். வெங்காயம் மூன்று மாதப்பயிர் என்பதால் ஒரே இடத்தில் இரண்டு பயிர்களை விளைவித்து மூன்றாவது மாதத்தில் வெங்காயத்தில் இருந்து வருமானம் பார்க்கிறேன்.
மஞ்சள் தோட்டத்திற்கு வாரம் ஒருமுறை தண்ணீர் கொடுக்க வேண்டும். அடியில் கிழங்கு வைத்த பிறகு தண்ணீரைக் குறைவாக கொடுத்து வந்தாலும் பிரச்சனை இல்லை. அதேபோல் சரியான நேரத்தில் களை பறிக்க வேண்டும். உரம் என்று பார்த்தால் நான் இயற்கை உரங்கள்தான் கொடுக்கிறேன். கடந்த 8 வருட விவசாயத்தில் நிலத்தை இயற்கை முறையில் பழக்குவதற்கே 3 வருடம் ஆனது. தற்போது எனது நிலம் இயற்கை விவசாயத்திற்கு பழக்கப்பட்டுவிட்டது என்பதால் பெரிதான அளவில் பூச்சித்தொல்லை இருப்பதில்லை. இந்த முறையில் நான் விவசாயம் செய்து வருவதால் ஒரு ஏக்கருக்கு எனக்கு 2.5 டன் அளவு மஞ்சள் கிடைக்கிறது.மஞ்சளைப் பொருத்தவரை பலரும் அதிக நிலத்தில் அதாவது 5 முதல் 10 ஏக்கர் நிலத்தில்தான் பயிரிடுவார்கள். அப்போதுதான், செலவிற்குத் தகுந்த வருமானம் பார்க்க முடியும். குறைந்த இடத்தில் பயிரிட்டாலும் அதிக இடத்தில் பயிரிட்டாலும் செலவு ஒரே மாதிரியாகத்தான் வரும். அந்தளவிற்கு மஞ்சளை அறுவடை செய்து மஞ்சள் பொடி ஆக்குவதற்கு அதிக பக்குவம் தேவை. ஆனால், நான் குறைந்த இடத்தில் மஞ்சள் சாகுபடி செய்வதால் குறைந்த அளவில்தான் லாபம் பார்க்க முடியும். ஆனால், இயற்கை முறையில் விளைவித்த பொருளை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்வதால் இதுவே எனக்கு போதுமானதாக இருக்கிறது’’ என நிறைவாக பேசுகிறார்.
தொடர்புக்கு:
தணிகாச்சலமூர்த்தி: 80150 15510.
அறுவடை செய்த மஞ்சளை வேக வைத்து, மீண்டும் காயவைத்து தோல் நீக்கி சுத்த மஞ்சளாக மாற்றி அதன்பின் மஞ்சள் பொடியாக அரைத்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த முறையில் விற்பனை செய்வதால் ஒரு கிலோ மஞ்சள் பொடி ரூ.440 என விற்பனை செய்ய முடிகிறது. ஒரு ஏக்கரில் மஞ்சள் சாகுபடி செய்வதற்கு ரூ.1.5 லட்சம் வரை செலவாகிறது. மஞ்சளை நேரடியாக பொடியாக விற்பனை செய்து விற்பதன் மூலம் ஒரு நல்ல தொகையை லாபம் பார்க்க முடிகிறது. அதே சமயம் வாடிக்கையாளர்களின் நேரடி பழக்கமும் கிடைக்கிறது என்கிறார் இந்த விவசாயி.
மஞ்சள் பயிரிட்டது போக மீதமுள்ள இடத்தில் காய்கறிப் பயிர்கள் பயிரிட்டு வரும் இவர், ஒரு இடத்தை தனியாக ஒதுக்கி குறுங்காடு ஒன்றை உருவாக்கி இருக்கிறார். உணவு பாதுகாப்புக்காக இருமடிப்பாத்தி முறையிலும் விவசாயம் செய்து வருகிறார்.
மஞ்சள், வெட்டிவேர், வீட்டுக் காய்கறிகள், மூலிகைச் செடிகள், கொடிக்காய்கள், கிழங்கு வகைகள், லெமன் கிராஸ், கறிபலா, கஸ்தூரி மஞ்சள், மஞ்சள் விதை கிழங்குகள் என சுமார் 230 வகையான செடி, கொடி, மரங்கள் இந்தக் குறுங்காட்டில் இடம்பெற்றுள்ளன.
The post மஞ்சளில் கிடைக்குது மகத்தான லாபம்! இயற்கை வெள்ளாமை… அசத்தும் இன்ஜினியர்… appeared first on Dinakaran.