மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை விரிவாக்கம் செய்யும் முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

1 day ago 3

சென்னை,

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (05.06.2025) சென்னை, கிண்டி, திரு.வி.க.நகர் தொழிற்பேட்டையில், சிறு வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் தொழிலாளர்களை தேடி பணியிடம் சார்ந்த தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகள், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்படும் முகாமினை தொடங்கி வைத்தார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

"தமிழ்நாடு முதல்-அமைச்சர் வழிகாட்டுதலோடு, தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் மக்கள் நல்வாழ்வுத்துறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே நிதிநிலை அறிக்கையில் 118 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. ஆகையால் இன்று அறிவிப்பு எண் 111 செயல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது மக்களைத் தேடி மருத்துவம் என்பது மக்கள் நல்வாழ்வுத்துறையின் சிறப்பு திட்டங்களில் முதன்மையான திட்டமாக உள்ளது.

இத்திட்டத்தை முதல்-அமைச்சர் கடந்த 05.08.2021 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், சாமணப்பள்ளியில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் இதுவரை 2 கோடியே 34 லட்சத்து 88 ஆயிரத்து 431 பேர் பயன்பெற்றிருக்கிறார்கள். குறிப்பாக 2 கோடி பேர் தாண்டிய அளவிற்கு பயன்பெற்றிருக்கும் நிலையில் 2024 செப்டம்பர் 25-ந்தேதி அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் ஐ.நா மன்றம் உலகில் தொற்றா நோய்களுக்கு வீடுகளுக்கே தேடி சென்று மருத்துவம் பார்க்கின்ற நாடு எது என்று அவர்கள் ஆராய்ந்து அறிந்தபோது தமிழ்நாடு மிகச் சிறப்பாக இந்த திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை கண்டுபிடித்து தமிழ்நாட்டிற்கு United Nation Interagency Task Force Award 2024 விருதினை மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐ.நா. மன்றம் வழங்கியது.

ஒருவர் கூட இந்த திட்டத்தினால் பயன்பெறாமல் விடுபட்டிருக்க கூடாது என்கின்ற நிலை இருக்க கூடாது என்கின்ற வகையில் இந்த திட்டத்தை தொடர்ந்து விரிவுப்படுத்திக் கொண்டே இருக்கிறோம்.

2024 ஜனவரி 9-ந்தேதி நான் வீடுகளுக்கு தேடிச் சென்று மக்களிடம் பரிசோதனை செய்யும்போது ஆண் தொழிலாளர்களாக இருந்தாலும் தொழிற்கூடங்களில் பணியாற்றுகின்ற மகளிராக இருந்தாலும் தொழிற்கூடங்களுக்கு சென்று விடுவதால் அவர்களுக்கும் தொழிற்சாலைகளுக்கே சென்று மக்களைத் தேடி மருத்துவம் எனும் திட்டத்தின்படி, அவர்களுக்கான பரிசோதனைகளை மேற்கொள்வது என்கின்ற வகையில் திருவள்ளுர் மாவட்டம் ஹீண்டாய் மோசிஸ் (Hyundai Mosis) கம்பெனியில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தோம்.

இந்த திட்டத்தில் முதற்கட்டமாக 711 தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்ற 8,35,000 பேரை கணக்கில் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதில் இதுவரை 3,90,111 பேர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 30,506 பேருக்கு புதிய நோய் பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை நோய் பாதிப்புகள் அறியாது வாழ்ந்துக் கொண்டிருப்பவர்களை அதாவது நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் அல்லது இரண்டும் சேர்ந்து இருப்பது என்கின்ற நிலைகள் தெரியாமல் இருந்தவர்கள் 30,506 பேர். மேலும் ஏற்கெனவே தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் சிகிச்சைகள் என்கின்ற வகையில் 12,468 பேருக்கு வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இத்திட்டத்தை மேலும் விரிவுப்படுத்திடும் வகையில் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலோடு, அறிவிப்பு எண் 111-ன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறு வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தொற்றா நோய் பரிசோதனைகள் மக்களைத் தேடி மருத்துவம் எனும் திட்டத்தின்படி வழங்கப்படும் என்கின்ற அறிவிப்பின்படி, இன்று சென்னை, கிண்டி, திரு.வி.க.நகர் தொழிற்பேட்டையில் பரிசோதனைகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நிறுவனத்தில் மட்டும் 250 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கப்படும் இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 7,750 சிறுவணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் உள்ள 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்ளுக்கு பயன்பெறும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே 8 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெறும்வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இதைப் பொறுத்தவரை தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்கள், வணிக நிறுவனங்களில் பணிபுரிவர்கள் என்கின்ற வகையில் 6 இலட்சம் பேரை முதற்கட்டமாக இலக்கு வைத்து இத்திட்டத்தை இன்றைக்கு தொடங்கி இருக்கிறோம்."

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Read Entire Article