
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே பழங்குடி குடியிருப்புகள் மற்றும் அரசு ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளன.
அந்த வகையில் பேச்சுப்பாறை அருகே குற்றியாறு அரசு ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்கும், அதனை ஒட்டியுள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்திலும் நேற்றுமுன் தினம் இரவு காட்டு யானைகள் வந்தன. 2 யானைகள் தொடக்கப்பள்ளி வளாகத்திற்குள் புகுந்து அங்கு இருந்த தென்னை உள்ளிட்ட மரங்களை வேரோடு பிடுங்கி சேதப்படுத்தின.
யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் வசித்து வரும் தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர் அச்சமடைந்தனர். அதே சமயத்தில் சிலர் துணிச்சலாக வீடுகளை விட்டு வெளியேறி பாத்திரங்களை எடுத்து கல்லால் தட்டி ஓசை எழுப்பியும், தீப்பந்தங்களை காட்டியும் யானைகளை துரத்தினர். பெரும் போராட்டத்திற்கு பிறகு யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.