மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடல்

3 hours ago 1

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.

இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

இந்நிலையில், இதுவரை 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கும்பமேளாவிற்கு வருகை தந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். இன்று ஒரே நாளில் 48 லட்சம் பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர் என உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது. மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் சுமார் 45 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கும்பமேளாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ராஜ்யசபா எம்.பி. சுதா மூர்த்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நீராடினர். அதேபோல நடிகைகள் ஹேமமாலினி மற்றும் அனுபம் கெர், ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாய்னா நேவால், நடன இயக்குனர் ரெமோ டிசோசா உள்ளிட்ட பிரபலங்களும் புனித நீராடினர் எனபது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகருக்கு வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தந்து மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடவுள்ளார் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Read Entire Article