
மும்பை,
3-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) தொடர் கடந்த மாதம் 14-ந் தேதி தொடங்கியது.. இதனையடுத்து நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை 149 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக ஹர்மன்ப்ரீத் கவுர் 66 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி களம் கண்டது. டெல்லியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மெக் லேனிங் மற்றும் ஷபாலி வர்மா களம் இறங்கினர்.இதில் மெக் லேனிங் 13 ரன், ஷபாலி வர்மா 4 ரன், அடுத்து வந்த ஜெஸ் ஜோனசென் 13 ரன், அன்னபெல் சதர்லேண்ட் 2 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் மரிசான் கேப் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் ஜெமிமா 30 ரன், அடுத்து வந்த சாரா பிரைஸ் 5 ரன் எடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து நிகி பிரசாத் களம் இறங்கினார்.மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய மரிசான் கேப் 40 ரன்னிலும், அடுத்து வந்த ஷிகா பாண்டே ரன் எடுக்காமலும் அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆகினர். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
இந்த நிலையில் , தோல்விக்கான காரணம் குறித்து டெல்லி கேப்டன் மேக் லேனிங் கூறியதாவது ,
இன்னொரு நல்ல சீசனை நாங்கள் பெற்றோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக மீண்டும் எங்களால் அந்த எல்லையை கடக்க முடியவில்லை. மும்பைக்கு முழு பாராட்டு, வாழ்த்துக்கள் .எங்களுக்கு ஏமாற்றமளிக்கும் விஷயம் என்னவென்றால், நாங்கள் பேட்டிங்கில் சரியாகச் செயல்படவில்லை. 150 ரன்களை எங்களுக்கு ஒரு நல்ல இலக்காக இருக்கும் என்று நினைத்தேன், ஒரு நல்ல சீசனில் விளையாடினோம், சில நல்ல தருணங்களைக் கொண்டிருந்தோம், ஆனால் நாங்கள் அனைவரும் மிகவும் ஏமாற்றமடைந்தோம். என தெரிவித்துள்ளார்.