
மான்செஸ்டர்,
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், ஏற்கனவே நடைபெற்ற 3 டி20 ஆட்டங்களில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டி20 போட்டி மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் சோபியா அதிகபட்சமாக 22 ரன்கள் சேர்த்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரீ சரணி, ராதா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி 17 ஒவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்தது. இதனால் இங்கிலாந்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற புள்ளி கணக்கில் இந்தியா வென்றது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 ஆட்டம் நாளை நடைபெறுகிறது.
நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் 1 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் அவர் சாதனை பட்டியல் ஒன்றில் இடம் பிடித்துள்ளார். அதாவது, சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 300க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனைகள் பட்டியலில் சோபி எக்லெஸ்டோன் இணைந்துள்ளார்.
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 300க்கும் மேற்பட்ட சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனைகள் பட்டியல்:-
ஜூலன் கோஸ்வாமி - 355
கேத்ரின் ஸ்கைவர்-பிரண்ட் - 335
எலிஸ் பெல்லி - 331
ஷப்னிம் இஸ்மாயில் - 317
அனிசா முகமது - 305
தீப்தி சர்மா - 301
சோபி எக்லெஸ்டோன் - 300