
லெய்செஸ்டர்,
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என இங்கிலாந்து கைப்பற்றியது. தொடர்ந்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 50 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 366 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக எமி ஜோன்ஸ் 129 ரன்னும், பியூமாண்ட் 106 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து 367 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியினர், இங்கிலாந்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 45.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 223 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 143 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ரியலியானா கிரிமண்ட் 53 ரன் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஆலிஸ் கேப்ஸி 3 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என (தொடரை கைப்பற்றிவிட்டது) இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி வரும் 7ம் தேதி நடைபெறுகிறது.