
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த சிம்ரன், தற்போது வில்லி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கி வருகிறார். பாலச்சந்தர் இயக்கிய பார்த்தாலே பரவசம், மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால், ராக்கெட்ரி ஆகிய படங்களில் மாதவனுடன் இணைந்து நடித்துள்ளார். இப்போது வரைக்கும் நடிகர் விஜய்க்கு சமமாக நடனம் ஆடிய ஒரே நடிகை என்ற பாராட்டைப் பெற்றவரும் அவர்தான். நடிகை சிம்ரன் திருமணத்துக்குப் பிறகு தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
நாயகியாக அல்லாமல் நல்ல கதைகளில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அஜித்குமாரின் 'குட் பேட் அக்லி' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். தற்போது, நடிகர் சசிகுமாருடன் 'டூரிஸ்ட் பேமிலி' படத்திலும் நடித்து கவனம் பெற்றுள்ளார்.
நடிகை சிம்ரன் சமீபத்தில் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில், தனது மகன் கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்ற புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். " சில வருடங்களுக்கு முன் என் கை குழந்தையாக இருந்த எங்கள் மகன், இன்று பட்டத்தை வாங்கியதை பார்க்கும்போது எனக்கு பெருமையாக உள்ளது. எங்களுக்கு மேல் வளர்ந்துள்ள எங்கள் மகன் இன்னும் வளர்ச்சி அடைவான். நீ எங்களை பெருமைப்படுத்தி விட்டாய்" என்று சிம்ரன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
இதற்கு முன் சூர்யா-ஜோதிகா மகள் தியா மற்றும் நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா மகன் யாத்ரா பட்டம் பெற்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வந்தது.