
கவுகாத்தி,
அசாமில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், அசாம் மாநில பேரிடர் மேலாண் கழகம் வெளியிட்டு உள்ள செய்தியில், நடப்பு ஆண்டில் வெள்ளத்திற்கு 17 பேர் பலியானார்கள். நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலியாகி உள்ளனர் என தெரிவித்து உள்ளது.
கவுகாத்தியில் நிலச்சரிவில் சிக்கி இன்று ஒருவர் பலியானார். கம்ரூப் மாவட்டத்தின் சந்திராப்பூர் பகுதியில் வெள்ள நீரில் மூழ்கி மற்றொருவர் பலியானார். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இன்று 2 பேர் பலியானார்கள்.
இதனால், மொத்தம் பலியானவர்கள் எண்ணிக்கை 23 ஆக உயர்வடைந்து உள்ளது. வெள்ளத்திற்கு 12 மாவட்டங்களை சேர்ந்த 3.37 லட்சம் பேர் பாதிப்படைந்து உள்ளனர். 12,659.99 ஹெக்டேர் பயிர்கள் மற்றும் 999 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
வெள்ளம் பாதித்த மாவட்டங்களில், 201 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, 1.47 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.