மகத்துவத்தை உணர்த்திய பூங்கார் அரிசி!

2 weeks ago 7

மண்ணை நம்பியும், மழையை நம்பியும், இலை தழைகளை நம்பியும் விவசாயம் பார்த்த நம் முன்னோர், இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி வளரும் நெல் ரகங்களையே அதிகளவில் பயிரிட்டு வந்தார்கள். பின்னாட்களில் அதிக மகசூல் வருவதற்காக வெள்ளை ரக அரிசியைப் பயிரிட ஆரம்பித்தார்கள். இந்த அரிசியையும் பாலிஷ் செய்து விற்பனை செய்வதால் நமக்கு போதிய அளவுக்கு நார்ச்சத்து கிடைப்பதில்லை. இதனால் பல்வேறு ஆரோக்கியக் கோளாறுகள் பல்கிப் பெருகத் தொடங்கி விட்டன.

நமது ஆரோக்கியம் பேணப்பட்டு, வருங்கால தலைமுறை வளமாக மாற வேண்டும் என்றால் நமது பாரம்பரிய நெல் ரகங்களை அதிகளவில் பயிரிட வேண்டும் என்கிறார் திருப்பத்தூர் மாவட்டம் செவ்வத்தூரை சேர்ந்த இயற்கை விவசாயி வெங்கடேஷ். தனது குடும்பத்திற்காக பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிடத் தொடங்கி, தற்போது பிறர் பயிரிடும் வகையில் விதை நெல் உற்பத்தி செய்து வரும் வெங்கடேஷை அவரது வயலில் சந்தித்துப் பேசினோம். “நான் எனது சிறுவயதில் இருந்தே விவசாயம் பார்க்கிறேன். ஆரம்பத்தில் ரசாயன உரங்களைப் பயன்படுத்தினேன். இன்றைக்கு முழுவதுமாக இயற்கை விவசாயத்திற்கு மாறியிருக்கிறேன். குறிப்பாக கடந்த ஐந்து வருடமாக இயற்கை விவசாயம் பார்த்து வருகிறேன். நம் முன்னோர்கள் பூங்கார் அரிசியைப் புதிதாய் திருமணமான தம்பதிக்கு கொடுப்பார்கள். குறிப்பாக வயிற்றில் கரு தரிப்பதற்கு இந்த பூங்கார் அரிசியைப் பயன்படுத்தி வந்தனர். எங்கள் வீட்டிலும் அதுபோன்ற ஒரு பிரச்சினை இருந்தது. இதற்கு வீட்டில் இருந்த பெரியவர்கள் சொன்னதன் காரணமாக பூங்கார் அரிசியைப் பயன்படுத்தினோம். இதன் பலனாக வயிற்றில் கரு தரித்ததோடு, பிரசவமும் எந்த பிரச்சினையும் இல்லாமல் எளிதாக நடந்தது. தாய்ப்பால் சுரப்பு சிறப்பாக இருந்தது. இந்த அளவுக்கு மகத்துவம் நிறைந்த பாரம்பரிய ரக அரிசிகளைப் பிறருக்கு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட ஆரம்பித்தேன். அதுவும் இயற்கை முறையில் பயிரிடத் தொடங்கினேன்.

இப்போது எனது மூன்று ஏக்கர் நிலத்தில் கருப்புக்கவுனி, மணிச்சம்பா, இலுப்பைப்பூ சம்பா, கருங்குறுவை நெல் ரகங்களைப் பயிரிட்டு வருகிறேன். இதில் கருப்புக்கவுனி மற்றும் கருங்குறுவையை தலா அரை ஏக்கரில் பயிரிட்டுள்ளேன். மற்ற நெல் ரகங்கள் அனைத்தையும் 20 சென்ட், 30 சென்ட் என்ற அளவிலேயே பயிரிட்டுள்ளேன். அரை ஏக்கரில் கருப்புக் கவுனியைப் பயிரிட 3 கிலோ விதை நெல் தேவைப்பட்டது. ஏற்கனவே பயிரிட்டு எடுத்து வைத்திருந்த நெல்மணிகளை விதைக்காக பயன்படுத்திக் கொண்டேன். நிலத்தில் நேரடியாக நெல்லை விதைக்காமல் மேட்டுப்பாத்தி அமைத்து விதைகளைத் தூவினேன். பின்பு அதில் வளர்ந்த நாற்றுகளைப் பிடுங்கி நிலத்தில் நடவு செய்வேன். இதேபோலத்தான் கருங்குறுவை, மணிச்சம்பா, மாப்பிள்ளை சம்பா, பூங்கார், இலுப்பைப்பூச் சம்பா, சீரகச் சம்பா நெல் ரகங்களையும் பயிரிடுவேன். கருப்புக்கவுனியைப் பொருத்த வரையில் 150வது நாளில் அறுவடைக்குத் தயாராகும்.பூங்கார் 100வது நாளிலும், மணிச்சம்பா 180வது நாளிலும், சீரகச் சம்பா 130வது நாளிலும், கருங்குறுவை 120வது நாளிலும் அறுவடைக்குத் தயாராகும். இந்த நெல்ரகங்களை சாகுபடி செய்வதற்கு, முதலில் நிலத்தை ஆறு முறை நன்றாக உழவு ஓட்டுவேன். அடியுரமாக தானியப் பயிர்களை விதைத்து மடக்கி உழுவேன். அதாவது நாற்றுகளை நடவு செய்வதற்கு முன்பு நிலத்தில் தண்ணீர் விட்டு ஒருமுறை உழவு ஓட்டுவேன். பின்பு அதில் உளுந்து, வரகு, சாமை, சோளம், கம்பு, கேழ்வரகு, துவரை, பச்சைப்பயறு, கொண்டைக்கடலை, மொச்சைப்பயறு, கொள்ளு உள்ளிட்ட தானியங்களின் விதைகளை நிலத்தில் தூவி விடுவேன். இவை 40வது நாளில் நன்கு செழித்து வளர்ந்திருக்கும். அப்போது அந்தப் பயிர்களை அப்படியே நிலத்தில் மடக்கி உழவு ஓட்டுவேன். எனக்கு மூன்று ஏக்கருக்கும் சேர்த்து கிட்டதட்ட 40 கிலோ தானியம்விதைப்புக்காக தேவைப்பட்டது.

தானியப்பயிர்களை மடக்கி உழவு ஓட்டிய பிறகு, மீண்டும் மூன்று முறை உழவு ஓட்டி மேட்டுப்பாத்தியில்இருக்கும் நாற்றுகளைப் பிடுங்கி நிலத்தில் நடவு செய்வேன். அனைத்து வகை பாரம்பரிய நெல்லுக்கும் நாங்கள் முக்கால் அடி இடைவெளி விட்டு நாற்றுகளை நடவு செய்வோம். நாற்றுகளை நடவு செய்த ஒரு நாள் கழித்து உயிர்த்தண்ணீர் கொடுப்போம். இந்தத் தண்ணீரோடு மாட்டுச்சாத்திரம், கோமியம், நாட்டுச்சர்க்கரை ஆகியவற்றைக் கலந்து தயார் செய்து வைத்திருந்த ஜீவாமிர்தத்தைக் கலந்து பயிர்களுக்கு கொடுப்பேன். இந்தக் கலவையைப் பயிர்களுக்கு கொடுப்பதன் மூலம் பயிர்கள் நன்கு செழிப்பாக வளரும். அடுத்ததாக உயிர் உரம் கொடுப்போம். மீன் அமிலம் கால் லிட்டர், பஞ்சகவ்யம் ஒன்றரை லிட்டரை தண்ணீரில் கலந்து பயிர்களுக்கு தெளிப்போம்.கருப்புக்கவுனி, கருங்குறுவை போன்ற நீண்ட நாள் பயிர்களுக்கு 40வது நாளில் களை பிடுங்குவோம். மணிச்சம்பா, பூங்கார், சீரகச்சம்பா போன்ற பயிர்களுக்கு களை வந்தவுடன் பிடுங்க வேண்டும். இவை குறுகிய காலப் பயிர் என்பதால் களைகளைப் பிடுங்காமல் விட்டால் தரமான நெல் கிடைக்காது. நிலத்தில் வரும் களை அனைத்தும் பசுந்தாள் உரத்திற்காக தூவிய தானியப்பயிர்கள்தான். அதனால் களைகளை பிடுங்கி எறியாமல் மீண்டும் நிலத்திலேயே கசக்கி போட்டுவிடுவோம். இந்தக் களைகள் மட்கி பயிர்களுக்கு உரமாகிவிடும்.

நீண்ட நாள் பயிர்களுக்கு 45வது நாளில் பத்திலைக் கரைசல் தெளிப்பேன். குறுகிய காலப் பயிர்களுக்கு 25 லிருந்து 30வது நாளில் கரைசலைத் தெளித்துவிடுவோம். அதேபோல் பயிர்களைப் பூச்சிகள் தாக்காமல் இருக்க வேப்பிலைக் கரைசல் தெளிப்போம். நீண்ட நாள் பயிர்களில் 100வது நாளில் பயிர் களில் இருந்து நெற்கதிர்கள் வரத்தொடங்கிவிடும். குறுகிய காலப் பயிர்களில் இருந்து 70, 80வது நாளில் கதிர்கள் வரத்தொடங்கும். கதிர்கள் வந்தவுடன் ஒருமுறை களை எடுத்து கதிர்களுக்கு பூண்டு, இஞ்சி, மிளகாய் கலந்த 3ஜி கரைசல் தெளிப்போம்.அறுவடை செய்வதற்கு முன்பு 10 நாட்கள் நிலத்தில் தண்ணீர் விடுவதை நிறுத்தி விடுவோம். இதுவே மழைக்காலமாக இருந்தால் 20 நாட்களுக்கு முன்பே நிலத்தில் தண்ணீர் விடுவதை நிறுத்தி விடுவோம். தற்போது கருப்புக்கவுனி நெல்லை மட்டும் அறுவடை செய்துள்ளேன். இதில் எனக்கு 76 கிலோ அடங்கிய 13 நெல் மூட்டை கிடைத்தது. இதனை அரிசியாக மாற்றியதில் 600 கிலோ கிடைத்தது. தற்போது மார்க்கெட்டில் ஒரு கிலோ கருப்புக்கவுனி அரிசி ரூ.190 லிருந்து ரூ.350 வரை விற்பனையாகிறது. நான் நேரடியாக விற்பனை செய்வதால் ரூ.200க்கு விற்பனை செய்கிறேன். இதில் எனக்கு ரூ.1.20 லட்சம் கிடைத்தது. மற்ற நெல் ரகங்கள் அறுவடைக்கு தயாராக இருக்கிறது.

விதைத்திருவிழா, கண்காட்சிகளில் நேரடியாகப் பாரம்பரிய அரிசியை விற்பனை செய்கிறேன். 10 மணி வரை விவசாயியாக இருக்கும் நான் அதன்பிறகு வியாபாரியாக மாறிவிடுவேன். நெல் விதைகள் மற்றும் பாரம்பரிய அரிசிகளை விற்பனை செய்வேன். சீசனைப் பொருத்து நெல் விதைகள் விற்பனையாகும். கடந்த இரண்டு சீசனில் இரண்டு டன் நெல் விதைகளை விற்பனை செய்தேன். சராசரியாக ஒரு கிலோ பாரம்பரிய விதை நெல்லை ரூ.120க்கு விற்பனை செய்வேன். இரண்டு டன் விதை நெல் விற்பனை செய்ததில் மட்டும் ரூ.2.40 கிடைத்தது. வண்டி செலவு, நடவுக் கூலி, அறுவடைக் கூலி என எப்படியும் கிடைக்கும் வருமானத்திலிருந்து 30 சதவீதம் செலவாகிவிடும். இதுபோக கிடைப்பது அனைத்தும் லாபம்தான். இதுவரை நான் கணக்கு பார்த்து விவசாயம் செய்தது கிடையாது. மக்களிடத்தில் பாரம்பரிய அரிசி சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே விவசாயம் பார்த்து வருகிறேன். திருப்பத்தூர் மாவட்டம் மட்டுமின்றி மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கும் பார்சல் மூலம் விதைநெல், பாரம்பரிய அரிசி ரகங்களை அனுப்பி வைக்கிறேன்’’ என்கிறார்.
தொடர்புக்கு:
வெங்கடேஷ்: 90433 38771.

The post மகத்துவத்தை உணர்த்திய பூங்கார் அரிசி! appeared first on Dinakaran.

Read Entire Article