சென்னை: போலீஸ் மானிய கோரிக்கை விவாதத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பதில் அளித்து பேச உள்ளார். அப்போது முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2025-2026ம் ஆண்டுக்கான நிதி நிலை பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த மாதம் 24ம் தேதி முதல் துறை ரீதியான மானியக் கோரிக்கைள் மீது விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று காவல் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை), தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை மானியக்கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
இந்த மானியக் கோரிக்கையில் சட்டப்பேரவையில் முன்வரிசையில் உள்ள தலைவர்கள் பேசினர். இறுதியாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். இதற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உடனுக்குடன் பதில் கொடுத்தனர். எதிர்க்கட்சி தலைவர் பேசி முடித்ததும் நேற்றைய கூட்டம் நிறைவு பெற்றது. தொடர்ந்து இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடுகிறது. இதில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிடுவார். இதில் போலீசாருக்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.
இதனைத்தொடர்ந்த பொதுத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதமும் நடைபெறும். விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் ஆவடி நாசர் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார். தொடர்ந்து அரசினர் சட்டமுன்வடிவுகள்-ஆய்வு செய்தலும் நிறைவேற்றுதலும், ஏனைய அரசினர் அலுவல்களும் நடைபெறும். தொடர்ந்து ஒரு மாத காலம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைப்பார்.
The post போலீஸ் மானிய கோரிக்கை விவாதத்திற்கு முதல்வர் இன்று பதிலளிக்கிறார்: முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு appeared first on Dinakaran.