பெரம்பூர்: புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (21), அதே பகுதியை சேர்ந்தவர் ராகுல் (18). இருவரும் கடந்த 10ம் தேதி இரவு 10 மணி அளவில் புளியந்தோப்பு நரசிம்மா நகர் மெயின் ரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது குடிபோதையில் வந்த இரண்டு பேர் சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் ஸ்ரீதர் மற்றும் ராகுல் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் சிபுக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் புளியந்தோப்பு சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த வெள்ளை சஞ்சய் என்கின்ற சஞ்சய் குமார் (20) மற்றும் கொடுங்கையூர் சேலைவாயல் பகுதியைச் சேர்ந்த சுகுமார் என்கிற மற்றொரு சஞ்சய் (20) ஆகிய இருவரும் குடிபோதையில் வெட்டியது தெரியவந்தது. இருவரையும் போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த சுகுமாரை மடக்கிப் பிடித்தனர். அப்போது அவர் போலீசாரிடம் இருந்து தப்பித்து ஓடும்போது கீழே விழுந்ததில் அவரது இடது கை உடைந்தது. இதனையடுத்து சுகுமாரை மீட்ட போலீசார் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மாவு கட்டு போட்டனர். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய போது வாலிபரின் கை முறிந்தது appeared first on Dinakaran.