ராமேஸ்வரம்: போலி விசாவுடன் ராமேஸ்வரத்தில் சுற்றித்திரிந்த அமெரிக்கரை மரைன் போலீசார் நேற்று கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் – தனுஷ்கோடி சாலையில், பச்சைப்பட்டி பகுதியில் நேற்று மாலை வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்தார். அந்த பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் அமெரிக்காவின் மிஸ்சிசிப்பி மாகாணத்தைச் சேர்ந்த லூசிபர்(39) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்த பாஸ்போர்ட், விசாவை பரிசோதனை செய்ததில் போலி என்பதும், அவர் சுமார் ஒரு மாதமாக இந்த பகுதியில் சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது.
இதையெடுத்து அவரை கடற்படை போலீசார் கைது செய்து, காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு நடத்திய தீவிர விசாரணையில் தெரியவந்ததாவது: லூசிபர் கடந்த பிப்.16ம் தேதி அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டார். ஆனால் முறையான விசா இல்லாததால் அந்நாட்டு விமான நிலைய அதிகாரிகள் அவரது பயணத்தை ரத்து செய்துவிட்டனர். பின்னர் அவர் தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகருக்கு சென்று அங்கிருந்து நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தார். உபி.யில் நடைபெற்ற கும்பமேளாவிலும் பங்கேற்றுள்ளார். பின்னர் அங்கிருந்து ரயில், பஸ்கள் மூலமாக கன்னியாகுமரி சென்றுவிட்டு ராமேஸ்வரம் வந்தது தெரியவந்தது.
மேலும், இவர் தனுஷ்கோடி கடல் வழியாக படகில் இலங்கைக்கு செல்ல திட்டமிட்டதும் தெரியவந்தது. அவரிடம் மத்திய, மாநில புலனாய்வு பிரிவு அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் தனுஷ்கோடி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இதுதொடர்பாக லூசிபர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சென்னை புழல் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
The post போலி விசாவுடன் ராமேஸ்வரத்தில் சுற்றித்திரிந்த அமெரிக்க வாலிபர் கைது: புழல் சிறையில் அடைக்க நடவடிக்கை appeared first on Dinakaran.