கீவ்: துருக்கியில் நாளை மறுநாள் ரஷ்ய அதிபர் புடினை சந்திப்பதற்காக காத்திருப்பேன் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் இரு நாடுகளையும் வலியுறுத்தி வருகின்றனர். போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பு நேற்று தொடங்கி 30 நாட்களுக்கு நிபந்தனையற்ற போர் நிறுத்தத்தை ரஷ்யா ஏற்க வேண்டும் என்று உக்ரைன் கோரியது. ஆனால் மாஸ்கோ இந்த திட்டத்தை நிராகரித்து நேரடி பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுத்துள்ளது.
இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று நான் இன்னும் நம்புகிறேன். வியாழக்கிழமை துருக்கியில் அதிபர் புடினுக்காக தனிப்பட்ட முறையில் காத்திருப்போம் என்று கூறியிருக்கிறார். 15ம் தேதி துருக்கியில் உக்ரைன் அதிபர் உடனான பேச்சுவார்த்தைக்காக ரஷ்யா அதிபர் புடின் செல்வாரா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
உக்ரைன் மீது டிரோன் தாக்குதல்
உக்ரைன் மீது நேற்று முன்தினம் இரவு கடுமையான வான்வழி தாக்குதலை ரஷ்யா நடத்தி உள்ளது. உக்ரைனில் 100க்கும் மேற்பட்ட டிரோன்களை ஏவி இரவு நேர தாக்குதலில் ஈடுபட்டதாக உக்ரைன் விமானப்படை குற்றம்சாட்டியுள்ளது.
The post போர் நிறுத்தத்தை விரும்பும் உக்ரைன்; 15ம் தேதி துருக்கியில் புடினுக்காக காத்திருப்பேன்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு appeared first on Dinakaran.