
ரோம்,
உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர், போப் ஆண்டவர்(வயது 88). கத்தோலிக்க திருச்சபையின் இந்த உச்சபட்ச பதவியில் போப் பிரான்சிஸ் இருந்து வந்தார். அர்ஜென்டினாவை சேர்ந்த இவர் கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 13-ந் தேதி போப் ஆண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
12 ஆண்டுகளாக இந்த பதவியில் இருந்த அவருக்கு முதுமை காரணமாக கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்தது. பின்னர் சுவாசக்கோளாறு காரணமாக கடந்த பிப்ரவரி 14-ந் தேதி இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு நடந்த பரிசோதனையில் நிமோனியா பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதற்காக தீவிர சிகிச்சை பெற்ற அவர் 38 நாட்களுக்குப்பின் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வாடிகனில் சமீபத்தில் நடந்த புனித வியாழன், புனித வெள்ளி பிரார்த்தனைகளிலும் போப் பிரான்சிஸ் பங்கேற்றார்.
இந்த நிலையில் போப் பிரான்சிஸ் கடந்த 21-ந்தேதி காலமானார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்தார். போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலகத்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரின் இறுதிச்சடங்கு 26-ந்தேதி(சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
இறுதிச்சடங்கிற்கு முன் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக போப் பிரான்சிஸ் உடல் ரோம் நகரில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.